டிரம்ப்பின் மசோதா நிறைவேறினால் புதுக் கட்சி.. மீண்டும் முருங்கை மரம் ஏறும் எலான் மஸ்க்!

Su.tha Arivalagan
Jul 01, 2025,12:17 PM IST

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் "பெரிய, அழகான மசோதா" மீது செனட் சபை விவாதம் நடத்தியுள்ள நிலையில்,  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், "அமெரிக்கா பார்ட்டி" என்ற புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


அரசாங்க செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று கூறிவிட்டு, இப்போது மிகப்பெரிய கடன் அதிகரிப்புக்கு வாக்களித்த காங்கிரஸ் உறுப்பினர்களை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்கள் அடுத்த வருடம் நடக்கும் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்கள் என்றும் மஸ்க் கூறியுள்ளார்.


குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு கட்சி தேவை என்றும், அப்போதுதான் மக்களுக்கு உண்மையான குரல் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது X பக்கத்தில் "அமெரிக்கா பார்ட்டி" என்ற புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், அரசாங்க செலவுகளை குறைக்க வேண்டும் என்று சொன்ன ஒவ்வொரு காங்கிரஸ் உறுப்பினரும், இப்போது வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடனை அதிகரிக்கும் மசோதாவுக்கு வாக்களித்ததற்காக வெட்கப்பட வேண்டும். நான் உயிரோடு இருக்கும் வரை, அவர்கள் அடுத்த தேர்தலில் தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்வேன் என்று மஸ்க் பதிவிட்டுள்ளார்.




மேலும் அவர் கூறுகையில், இந்த மோசமான செலவு மசோதா நிறைவேற்றப்பட்டால், அடுத்த நாளே அமெரிக்கா பார்ட்டி தொடங்கப்படும்.  நமது நாட்டிற்கு குடியரசுக் கட்சி - ஜனநாயகக் கட்சி என்ற இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு கட்சி தேவை. அப்போதுதான் மக்களுக்கு உண்மையான குரல் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.


டிரம்ப்பின் மசோதா அமெரிக்காவின் கடனை 5 டிரில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் என்பது மஸ்க்கின் குற்றச்சாட்டாகும்.  இந்த மசோதாவின் மூலம் கடனை ஐந்து டிரில்லியன் டாலர்கள் வரை அதிகரிப்பது மூலம், நாம் ஒரு கட்சி நாட்டில் வாழ்கிறோம் என்பது தெளிவாகிறது. இது ஒரு பன்றிப் பண்ணை கட்சி!! மக்களுக்கு உண்மையாக அக்கறை உள்ள ஒரு புதிய அரசியல் கட்சி தேவை என்று மஸ்க் ஆவேசமாக கூறியுள்ளார். 


மின்சார வாகனங்கள் மற்றும் சூரிய சக்திக்கு வழங்கப்படும் மானியங்கள் ரத்து செய்யப்பட்டதால் நான் கவலைப்படவில்லை. ஆனால் இந்த மசோதா எதிர்கால தொழில்களை அழித்துவிட்டு, பழைய தொழில்களை ஊக்குவிக்கிறது. இது ஒரு கடன் அடிமைத்தனம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


மே 2025 தொடக்கத்தில், டொனால்ட் டிரம்ப்பின் முக்கிய செலவு மசோதாவான "ஒரே பெரிய அழகான மசோதாவை" எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார். இது தேசிய கடனை அதிகரிக்கும் என்று எச்சரித்தார். இது அவர்களின் மோதலின் தொடக்கமாக அமைந்தது.


மே 2025 இறுதியில், மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தை விட்டு வெளியேறி, டிரம்ப்பின் கொள்கைகளில் இருந்து விலகிச் சென்றார். இது அவர்களின் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியது.


ஜூன் 5, 2025 அன்று, இந்த மோதல் சமூக ஊடகங்களில் ஒரு பகிரங்க சண்டையாக மாறியது. மஸ்க் டிரம்ப் நன்றியில்லாமல் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டினார். டிரம்ப் மஸ்கின் நிறுவனங்களுக்கான கூட்டாட்சி ஒப்பந்தங்களை திரும்பப் பெறுவதாக மிரட்டினார்.


ஜூன் 2025 ஆரம்பத்தில் இருந்து நடுப்பகுதி வரை, மஸ்க் சில ஆத்திரமூட்டும் பதிவுகளை நீக்கிவிட்டு, டிரம்ப் குடியேற்ற அமலாக்கம் தொடர்பான பதிவுகளை மீண்டும் பகிர்ந்ததன் மூலம் ஒரு சமரச முயற்சியை மேற்கொண்டார். ஆனால், ஒட்டுமொத்த உறவு பதட்டமாகவும் நிலையற்றதாகவும் இருந்தது.


செனட் சபை இந்த வாரம் மசோதா மீது இறுதி வாக்கெடுப்பு நடத்த உள்ளது. அது தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், மஸ்க் அமெரிக்கா பார்ட்டியை உருவாக்குவாரா, 2026 தேர்தலுக்கு முன்னதாக அவரது பெரிய நிதி பலத்தை கண்டு போட்டியிடும் வேட்பாளர்கள் பயப்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.