எழுதுகிறேன் என் மனதை (கடிதக் கவிதை)

Su.tha Arivalagan
Sep 09, 2025,05:02 PM IST

- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி


அன்புள்ள அண்ணி ,


நீண்ட நாட்களாக என் மனதின்,

நீங்கா பாரத்தை உங்களிடம்  சொல்ல, 

நினைத்ததால் இந்த கடிதத்தினை 

நிறைந்த அன்புடன் எழுதுகிறேன்..!!


அம்மா அப்பாவை இழந்துவிட்ட  எனக்கு,

அண்ணாவே என் இன்னொரு அப்பா. 

அண்ணாவிற்கு திருமணமான போது,

அளவில்லா  மகிழ்ச்சி அடைந்தேன்..!!




அண்ணனின் திருமணத்தால், எனக்கு,

அம்மாவும் கிடைக்கப் போகிறாள் என,

ஆசையோடு காத்திருந்தேன். 

அன்போடு அடியெடுத்து வைத்தீர்கள்..!!


எனக்கும், அண்ணியான உங்களுக்கும்,

ஏறத்தாழ பத்து  வயது  வித்தியாசம்,

என்பதால், ஆரம்பத்தில் நீங்கள் காட்டிய,

எல்லையற்ற  அன்பில்  பூரித்துப் போனேன்..!!


எல்லா விஷயங்களையும் பொறுப்பாய் ,

எண்ணி கவனித்துக் கொண்ட நீங்கள் , 

என் மீது மிகுந்த அக்கறை காட்டி,

என்னையும் பொறுப்பாய், கவனித்தீர்கள்..!!


அதனால் அகம் மகிழ்ந்து போனேன்.

ஆனால் உங்களுக்கு ஒரு பெண் பிறந்த பிறகு, 

அது நியாயம் தான் என்றாலும், நான் 

அண்ணியின் நிராகரிப்பால் தவித்துப் போனேன்...!!


அழகிய  உங்கள் பெண்ணை,  என் 

அன்பு தங்கையாகவே  என்னுள் பாவித்து ,

அளவு கடந்த அன்பு செலுத்தினேன். ஆனால்  

அம்மா ஸ்தானத்திலிருந்து  சிறிது சிறிதாய்,


என்னைவிட்டு,  விலகிப் போய் விட்டீர்கள் ,

என்பது  எனக்கு  பேரிடியாக இருந்தது. 

எத்தனை இரவுகள் உங்கள் அன்புக்காக 

ஏங்கி, தூங்காமல் அழுதிருக்கிறேன்..!!


நீங்கள் என்னை மகளாய் நினைக்காவிடினும், 

நான் உங்களை என்றும்  என் அம்மாவாய்,

நினைத்துக் கொண்டிருக்கிறேன்  என்பதே...

நிதர்சனமான உண்மை ..!!


உண்மையான  அன்புடன் ,

உங்கள் மகளாகிய நாத்தனார் .


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).