சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

Su.tha Arivalagan
Sep 08, 2026,03:06 PM IST

சென்னை : சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவைச் செயல்பாடுகள், நிதி மோசடிகள் மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சி குறித்து கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.


சட்டமன்றத்தின் பொன்னான நேரம் வீணடிப்பு :

சட்டமன்ற நடைமுறைகள் குறித்துப் பேசிய அவர், பேரவையின் பொன்னான நேரம் தேவையற்ற விவாதங்களால் வீணடிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். "ஒரு நாளில் 10 மணி நேரம் சட்டமன்றம் நடந்தால், அதில் வெறும் 3 மணி நேரம் மட்டுமே மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மாறி மாறிப் பேசி நேரத்தைக் கழித்து விடுகின்றனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் வெறும் 3 அமைச்சர்கள் மட்டுமே பதில் அளிக்கின்றனர்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


கேள்விகளுக்குப் பதிலளிக்காத முதல்வர் : 




தொடர்ந்து நிதி மோசடி மற்றும் காவல்துறை விவகாரங்கள் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மதுரையில் நடைபெற்றுள்ள ரூ.1,000 கோடி நிதி மோசடி மற்றும் FQL மோசடி குறித்து நான் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. அதேபோல, காவல் துறையினரின் ஊதிய உயர்வு தொடர்பான எனது கேள்விகளுக்கும் அவரிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை" என்று சாடினார்.


தவெக மீது விமர்சனம் மற்றும் இடைத்தேர்தல் கணிப்பு :

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்தும், வரவிருக்கும் இடைத்தேர்தல் குறித்தும் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: லஞ்ச ஒழிப்புத் துறை என்பது அனைத்து ஆட்சிக் காலங்களிலுமே இயங்கி வந்துள்ளது. ஆனால், தவெக ஆட்சியில் தான் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடப்பது போலப் போலி விளம்பரங்களையும் 'ரீல்ஸ்'களையும் போட்டு வருகிறார்கள். தற்போதைய இடைத்தேர்தல் வந்ததற்குத் தவெகவின் குதிரை பேரமே முக்கியக் காரணம். அனைத்துச் சவால்களையும் தாண்டி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்.


சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், அரசின் நிதி முறைகேடுகளுக்கு முதலமைச்சர் பொறுப்பேற்றுப் பதிலளிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.