சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

Su.tha Arivalagan
Jun 19, 2026,01:15 PM IST

சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சட்டசபை நேரலை ஒளிபரப்பு பாதியில் நிறுத்தப்பட்டது தொடர்பாகவும், வெள்ளை அறிக்கை தலைமை செயலகத்தில் வைத்து வெளியிடப்பட்டது குறித்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.


இன்று (ஜூன் 19, 2026) சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போதிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தவெக அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். 


வெள்ளை அறிக்கை தாக்கல் :


தமிழக அரசின் நிதிநிலை மற்றும் மாநிலத்தின் தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்துப் பேசுகையில், அரசு கடைப்பிடிக்கும் நடைமுறைகள் சட்டமன்றத்தின் பாரம்பரிய மரபுகளை மீறுவதாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கையைச் சட்டமன்றத்தில் தான் தாக்கல் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, அவைக்கு வெளியே அல்லது மாற்று வழிகளில் வெளியிடுவது முறையல்ல. அவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதே உண்மையான சட்டமன்ற மரபு" என்று சுட்டிக்காட்டியுள்ளார். அரசின் இத்தகைய போக்கு, வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகத்தையே காட்டுவதாக அவர் மேலும் சாடியுள்ளார்.


"முழு நேரலை... அத்தனையும் உருட்டா?" 




இதற்கிடையில், சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படும் என்று ஆளுங்கட்சி அளித்த வாக்குறுதி முற்றிலும் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி (AIADMK IT Wing) சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. சட்டமன்றப் பேரவையின் நேரலை திடீரென நிறுத்தப்பட்டது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், "நல்லா இருக்கு சார் உங்க மாற்றம். முழு நேரலை.. முழு நேரலைன்னு சொன்னீங்க... அத்தனையும் உருட்டா சார்!; ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. எந்த வாக்குறுதியையும் முழுவதுமாக நிறைவேற்றும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்பதையே இது காட்டுகிறது" என்று தங்களது அதிருப்தியையும் கிண்டலையும் வெளிப்படுத்தியுள்ளனர்.


அவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் எதிர்க்கட்சிகளின் குரலையும், அவையில் நடைபெறும் உண்மையான விவாதங்களையும் மக்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த நேரலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.


சட்டசபை நிகழ்வுகள் முழுவதுமாக நேரலை செய்யப்படுவது தொடரும் என நேற்று தான் அமைச்சர் ராஜ்மோகன் கூறி இருந்தார். அவர் சொன்ன அடுத்த நாளே நேரலை பாதியில் நிறுத்தப்பட்டது தொடர்பாக அதிமுக கேள்விகளை எழுப்பி வருகிறது.