ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சு திணறி பலி!

Su.tha Arivalagan
Dec 03, 2025,05:00 PM IST

- சரளா ராம்பாபு


ஈரோடு: ஈரோட்டில், சாய்சரண் என்ற ஐந்து வயது சிறுவன் மொந்தன் வாழைப்பழம் சாப்பிட்டு உயிரிழந்த சோகம் அப்பகுதி மக்களை அதிர வைத்துள்ளது.


சிறு குழந்தைகள் எதையும் வேகமாக சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட நேரத்தில்தான் பெரியவர்கள்தான் அருகே இருந்து அவர்களை சரியாக சாப்பிடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஈரோட்டில் இப்படித்தான் ஒரு குழந்தை வாழைப்பழம் தொண்டையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.


ஈரோடு அன்னை சத்யா பகுதியில் வசிப்பவர்கள் மாணிக்கம் மற்றும் மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து வயது மகன் சாய்சரண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.  நேற்று இரவு சிறுவன் வாழைப்பழம் சாப்பிட ஆசைப்பட்டுள்ளான். தந்தையும் மொந்தன் வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துள்ளார். குழந்தை அதை சாப்பிட்டபோது, தொண்டையில் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இருமல் வந்து புரைக்கேறியுள்ளது 




உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். ஆனால் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்று மூச்சுத் திணறல் ஏற்படும்போது, ஆக்சிஜன் ஹைபாக்சியா  எனப்படும் நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வது பற்றாக்குறையாகும். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு  நான்கு நிமிடத்திற்கு மேல் நீடித்தால் நுரையீரல் செயலிழந்து போய் விடும். 


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ரம்புட்டான் பழம், நாவல் பழம், பலாப்பழம் போன்றவற்றை சாப்பிட்டு விதை சிக்கிக் கொண்டு உயிரிழந்த சம்பவங்கள் பல நடந்தேறியுள்ளன. இதற்கு சிறுவர்களிடம் பெற்றோர்கள் மிக கவனக்குறைவாக இருப்பதே மிக முக்கியமான காரணமாகும். குழந்தைகளுக்கு பழங்களே தந்தாலும் அதனை சிறு சிறு துண்டுகளாக்கி மிருதுவான உணவாக மாற்றித் தர வேண்டும் என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 


குழந்தையின் தொண்டைக்குள் ஏதேனும் சிறு உணவு சிக்கிக் கொண்டால் அவர்களை முதுகில் தட்டி தலை கீழாக கிடத்தி முதல் உதவி செய்தால் உயிரிழப்பிலிருந்து காப்பாற்ற முடியும். இந்த துயர சம்பவம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வையும் 

மேலும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பள்ளி செல்லும் குழந்தைகளின் உணவு டப்பாக்களில் மிருதுவான சிறிய சிறிய பழத்துண்டுகளையே வைத்து தர வேண்டும்.


(சரளா ராம்பாபு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)