ஓட்டல் ஊழியர்களை தாக்கிய விவகாரம்: தலைமை காவலர் மோகன் குமார் சஸ்பெண்ட்!
ஈரோடு: காஞ்சிக்கோயில் பகுதியில் இரவு 10 மணியைக் கடந்து இயங்கிய உணவகத்தில் சென்று அங்கு வேலையில் இருந்த ஊழியரைத் தாக்கிய தலைமைக் காவலர் மோகன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் இரவு 10 மணிக்கு ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணியாற்றி வரும் மோகன் குமார் ரோந்து சென்றுள்ளார். அப்போது 10 மணிக்கு மேல் திறந்திருந்த உணவகத்தை மூட சொல்லி தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார் காவலர் மோகன் குமார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த தலைமைக்காவலர் மோகன் குமார், அங்கிருந்த ஊழியர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்களைக் கைகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் எழுப்பியது. இந்தச் சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றது. முதற்கட்ட விசாரணையில், காவலர் மோகன் குமார் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதும், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, தலைமைக்காவலர் மோகன் குமாரைப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார்.