தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!
- ஸ்வர்ணலட்சுமி
ஈரோடு அருகே உள்ள ராட்டை சுற்றி பாளையத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோவில் 'தென்னகத்து காசி 'என்று அழைக்கப்படுகிறது. காசியில் உள்ள அதே அமைப்பை கொண்ட கோவில் இங்கு உலகிலேயே மிக உயரமான கால பைரவர் சிலை அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் காங்கேயம் மெயின் ரோடு அவல்பூந்துறை ராட்டை சுற்றி பாளையத்தில் காலபைரவர் மேற்கு பார்த்து அமர்ந்திருப்பது தனிச்சிறப்பு . இக்கோவிலில் 39 அடி உயரமான,18 அடி அகலமான பிரம்மாண்ட காலபைரவர் சிலை அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
வேல்,சூலம்,உடுக்கை, அட்சய பாத்திரம் ஏந்தி 4 கைகளுடன் இத்தனை(39 அடி) உயரமான காலபைரவர் சிலை அமைந்திருப்பது உலக சாதனையில் இடம் பிடித்துள்ளது. பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்பது பொருள். இந்த கோவில் 125 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. 62 காலபைரவரின் உருவ சிலைகளோடு அமைய பெற்றுள்ளது இக்கோவிலின் கூடுதல் சிறப்பு.
காசியில் எட்டு இடங்களில் காலபைரவருக்கு கோவில்கள் உள்ளன. அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காலபைரவர் கோவில் அமையப்பெற்றுள்ளது. காலத்தின் கடவுளான கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்றும், தேய்பிறை அஷ்டமியில் இவரை வழிபட கஷ்டங்கள் கரைந்து போகும் என்பது நம்பிக்கை.
காலபைரவர் சிவபெருமானின் ருத்ர ரூபமாக சொல்லப்படுபவர். உலகிலேயே மிக உயரமான பைரவர் சிலை அமையப்பெற்றுள்ள இக்கோவிலில் மூலவராக 'ஸ்வர்ண லிங்க பைரவர்' பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு அமையப்பெற்றுள்ள பைரவருக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அருகில் சென்று பூஜைகள் செய்வது இக்கோவிலின் தனிச்சிறப்பு. தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு உகந்த தினம் என்பதால் அஷ்டமி நாட்களில் திரளான பக்தர்கள் வந்து இக்கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம்.
கும்பாபிஷேகம்: 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி இந்த கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.கடன் பிரச்சினைகள், காரிய தடைகள்,வறுமை நீங்கி,வளம் பெருக காலபைரவருக்கு விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. பைரவருக்கு வில்வம் மற்றும் வாசனை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்வதினால் கடன் பிரச்சினைகள் நீங்கும். வடை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. பைரவரை வணங்கி வழிபாடுகள் செய்ய பயம் அகலும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு 'ஜென்ம அஷ்டமி 'ஆகும். மேலும் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு இக்கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது. சித்திரை பரணி,ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய 'பரணி' நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்களாகும். பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வணங்கி வழிபாடுகள் செய்வதினால் புண்ணியமும்,பலனும் அதிகம் கிடைக்கும்.
இக்கோவில் தினமும் காலை எட்டு மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். விசேஷமான நாட்களான அமாவாசை, பௌர்ணமி, மற்றும் அஷ்டமி நாட்களில் பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகிறார்கள். இக்கோவிலில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. பிற கோவில்களைப் போல் அல்லாமல் அனைத்து பக்தர்களும் கருவறைக்குள் நுழைந்து தங்கள் கைகளாலேயே பைரவருக்கு பூஜை செய்யலாம்.
இக்கோவில் ஆன்மீக முக்கியத்துவத்திற்கும், கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலைக்கும் பெயர் பெற்றது. சுற்றுலா செல்பவர்கள் தங்களால் இயன்ற பொழுது கோவிலுக்கு சென்று காலபைரவரின் அருள் பெறுக.
இன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் வாசகர்களுக்கு தென் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்.மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.