எத்தியோப்பியாவில் வெடித்த .. ஹெய்லி குபி எரிமலை.. இந்தியா வரை பாதிப்பு!

Su.tha Arivalagan
Nov 25, 2025,01:26 PM IST
- அ.சீ. லாவண்யா

டெல்லி: நீண்ட காலமாக செயலற்றிருந்த ஹெய்லி குபி எரிமலை திடீரெனச் செயல்பட்டு, பல நூறு கிலோமீட்டர் அளவுக்கு எரிமலை சாம்பல் பறந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட 10, 000 வருடமாக இந்த எரிமலை உறை நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிப்பின் தாக்கமாக, அஃபார் பிராந்தியத்திலுள்ள எர்ரா அலே மற்றும் அப்டெரா நகரங்களுக்கு அருகே மிதமான நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன.

மக்கள் பாதுகாப்பிற்காக அந்தப் பகுதிகளில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மேலும் அதிர்வுகள் தொடரக்கூடும் என புவியியல் ஆய்வு மையம் GSC (Geological Survey Center) எச்சரித்துள்ளது.



எரிமலை வெடித்த இடம், உலகின் மிகச் செயல்படும் எரிமலைகளில் ஒன்றான எர்ரா அலே எரிமலையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தென் கிழக்கில் இருக்கிறது.

எரிமலைச் சாம்பல் வானில் பரவியதால் விமானப் போக்குவரத்துக்கு சற்று அபாயம் இருப்பதாக எத்தியோப்பியா விமான ஆணையம் முன்னெச்சரிக்கை அனுப்பியுள்ளது.

இதுவரை உயிர்பலி அல்லது காயம் பற்றிய தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை. எரிமலைக்கு அருகிலுள்ள கிராமங்களில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனார்.

அஃபார் பிராந்தியம் புவி உருவாக்கத்தின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்று என்பதால், எரிமலைச் செயல்பாடுகள் அதிகம் காணப்படும் இடமாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். வெடிப்பு காரணமாக நிலத்தளத்தின் கீழ்ப்பு, வாயு வெளியேற்றம் போன்ற மாற்றங்கள் இன்னும் நடைபெற்று வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெய்லி குபி எரிமலையின் இந்த திடீர் மற்றும் முன்னெப்போதும் காணாத வெடிப்பு, எத்தியோப்பியாவின் புவிச்சரிதவியல் ஆராய்ச்சிகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று அறிவியல் வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன. 

 இந்த வெடிப்பு, எரிமலைகள் இன்னும் 'உறங்கியவை' அல்ல, 'கவனித்துக் கொள்ளும்' நிலையில் உள்ளன என்பதை உலகிற்கு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது-பூமி இன்னும் உயிருடன் சுவாசித்து கொண்டிருப்பதைப் போல.

இந்த எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட  சாம்பல் புகையானது இந்தியாவையும் கூட பாதித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் பலவற்றில் சாம்பல் புகை காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பில் பங்கேற்று எழுதி வருகிறார்)