முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

Su.tha Arivalagan
Aug 13, 2026,02:53 PM IST

திருவண்ணாமலை: முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான எ.வ.வேலு மற்றும் அவரது மகன் குமரன் மீது சட்டவிரோதமாக மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மாநாட்டுத் திடலுக்காக ஏரியில் மண் திருட்டு:

கடந்த 2025 டிசம்பர் 14-ம் தேதி திருவண்ணாமலையில் திமுக இளைஞர் அணியின் வடக்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுத் திடலைச் சமன் செய்வதற்காக, திருவண்ணாமலையில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


விதிகள் மீறல் & ரூ.8 கோடி இழப்பு:




சட்டப்படி, பொதுப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் மண் எடுக்க 1 மீட்டருக்கு மேல் அனுமதி அளிக்க வழிவகை இல்லை. ஆனால், எ.வ.வேலு அமைச்சராக இருந்த காலத்தில் தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, சட்டத்தை மீறி 3 முதல் 7 மீட்டர் ஆழம் வரை மண் அள்ளியுள்ளார். இதன் மூலம் அரசுக்கு ரூ.8 கோடிக்கும் மேல் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நிலப் பரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்கள்:

மேலும், இந்த மாநாடு நடைபெற்ற 124 ஏக்கர் நிலமானது எ.வ.வேலுவின் மகன் குமரன் என்பவருக்குச் சொந்தமான 'அருணை புராடக்ட்ஸ் & சர்வீசஸ் பி.லிட்' என்ற நிறுவனத்திற்கு உரிமையானது எனக் கூறப்படுகிறது. முன்னதாக, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் ஒருவரின் பெயரில் இருந்த இந்த 124 ஏக்கர் நிலம், மிகக் குறைந்த விலைக்கு எ.வ.வேலுவின் மகனால் வாங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இந்த நிலப் பரிவர்த்தனை தொடர்பாகவும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அறப்போர் இயக்கம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.


இச்சம்பவம் தமிழக அரசியலிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.