பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
டெல்லி: மாநிலங்களில் உள்ள அனைத்து பாகிஸ்தான் நாட்டினரையும் அடையாளம் கண்டு வெளியேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ம் தேதி பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சனை இருந்தாலும், சுற்றுலா பயணிகளை தாக்கி இருப்பது இதுவே முதல்முறையாகும். இந்த கொடூர சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு தடைநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் வாகன சோதனை சாவடி மூடல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா.
இந்நிலையில், அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ்தா தொலைபேசியில் உரையாடியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் தத்தமது மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக பாகிஸ்தனிற்கு திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன
தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக காவல்துறை தகவல் வெளியிட்டதை அடுத்து, மருத்துவ காரணங்களுக்காக தமிழகத்திற்கு வந்தவர்கள் 7 நாள்களில் வெளியேற வேண்டும் என்றும், தாக்குதல் நடந்ததற்கு 2 தினங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்தவர்கள் 2 தினங்களில் வெளியேற வேண்டும் என்றும், வியாபார ரீதியாக வந்தவர்களும் 2 நாள்களில் வெளியேற வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.