Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
டெல்லி: கடந்த மாதம் Google நிறுவனம் Gemini Nano Banana AI என்ற புதிய கருவியை அறிமுகப்படுத்தியது. இது இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. பயனர்கள் இதன் மூலம் 3D பொம்மைகள் மற்றும் புடவை அணிந்த புகைப்படங்களை உருவாக்கி Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். ஆனால், இந்த புதிய தொழில்நுட்பம் தனிநபர் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளது.
"Nano Banana" மோகம் Google நிறுவனத்தின் Gemini Nano மாடல் மூலம் உருவானது. இது பயனர்களின் சாதாரண செல்ஃபி புகைப்படங்களை பளபளப்பான தோல் மற்றும் கவர்ச்சியான அம்சங்களுடன் கூடிய 3D பொம்மைகளாக மாற்றுகிறது. இதைத் தொடர்ந்து, "Banana AI Saree" என்ற புதிய டிரெண்ட் Instagram-ல் பிரபலமாகி வருகிறது. இது பழைய பாலிவுட் திரைப்படங்களில் வரும் புடவை தோற்றத்தில் புகைப்படங்களை மாற்றுகிறது. குறிப்பாக சிஃபான் புடவைகள், சினிமா பின்னணிகள் மற்றும் பழமையான தோற்றங்களை பயன்படுத்துகிறது.
Google Gemini Nano Banana பாதுகாப்பானதா என்ற கேள்வியை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர். Google நிறுவனம் Gemini மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் SynthID என்ற கண்ணுக்கு தெரியாத வாட்டர்மார்க் உடன் இருக்கும் என்று கூறுகிறது. மேலும், இது AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் என்பதை உறுதிப்படுத்த உதவும் metadata tags உடன் இருக்கும் என்றும் தெரிவிக்கிறது. Google நிறுவனத்தின் aistudio.google.com பக்கத்தில், "Gemini 2.5 Flash Image மூலம் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட அனைத்து படங்களிலும் SynthID டிஜிட்டல் வாட்டர்மார்க் இருக்கும். இது AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாக அடையாளம் காட்டும். இதன் மூலம் பயனர்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், SynthID-ஐ கண்டுபிடிக்கும் கருவிகள் இன்னும் பொது மக்களுக்கு கிடைக்கவில்லை. மேலும், வாட்டர்மார்க்குகளை எளிதில் மாற்ற முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். Reality Defender நிறுவனத்தின் CEO பென் கோல்மன் அளித்த பேட்டியில், "வாட்டர்மார்க்கிங் பார்ப்பதற்கு ஒரு நல்ல தீர்வாக தோன்றினாலும், அதை எளிதில் போலியாக உருவாக்கலாம், நீக்கலாம் அல்லது புறக்கணிக்கலாம்" என்று கூறியுள்ளார். UC Berkeley School of Information பேராசிரியர் ஹானி ஃபரித் இதுகுறித்துக் கூறுகையில், வாட்டர்மார்க்கிங் ஒரு நல்ல பாதுகாப்பு அம்சமாக இருந்தாலும், அது மட்டும் போதுமானதாக இருக்காது என்றார்.
இந்திய காவல்துறை அதிகாரிகளும் கூட இதுகுறித்து மக்களை எச்சரித்துள்ளனர். எப்போதுமே இணையத்தில் வைரலாக பரவும் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். Nano Banana மோகத்தில் விழுவது ஆபத்தானது. நீங்கள் ஆன்லைனில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்தால், மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளது. ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் குற்றவாளிகளின் கைகளுக்குச் செல்லலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
வைரலாகிறதே என்று அவசரப்பட்டு எந்த டிரண்டிங்கிலும் உடனே இணையாதீர்கள்.. அதன் சாதக பாதகங்களையும் பார்த்து விட்டே அணுகுங்கள்.. நம்ம பாதுகாப்பு நம்ம கையில்.