திருச்சி அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்த ஆர்டிஓ தேவசேனா.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
திருச்சி: சாலை விபத்தில் உயிரிழந்த ஆர் டி ஓ ஆரமுத தேவசேனாவிற்கு ரூ.1.15 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி ஆர் டி ஓ வாக இருந்தவர் ஆரமுத தேவசேனா. இவருக்கு வயது 50. இவர் இன்று காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்பேது ஜீப் ஜீயர்புரம் அருகே கரியகுறிச்சி பகுதிக்கு வந்தபோது விபத்தில் சிக்கினார்.
திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஜீப்பும் நேருக்கு நேர் மோதுவது போல வந்தது. அதில் இருந்து தப்பிக்க டிரைவர் வேகமாக இடது பக்கம் திருப்பினார்.அப்போது ஜீப் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேசிபி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆர் டி ஓ ஆரமுத தேவசேனா இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ஜீப்பை ஓட்டி வந்த டிரைவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த கோர விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த முசிறி ஆர் டி ஓ ஆரமுத தேவசேனா குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சமும், குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சமும், அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியும் வழக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.