தமிழக மீனவர்களின் மீது.. இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல்.. மீனவர்கள் போராட்டம்!
நாகை: அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், மருதூர் கிராமங்களை சேர்ந்த 30 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை கண்டித்து அப்பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் அத்துமீறி வந்ததாக கூறி ஒவ்வொரு முறையும் இலங்கை கொள்ளையர்களால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அதே சமயத்தில் மீனவர்களின் உடைமைகளையும் பறித்து சென்று விடுகின்றனர் இதனால் மீன் பிடி தொழிலில் ஈடுபட முடியாமல் மீனவர்கள் தவிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த தாக்குதல் நடைபெறாமல் தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் இன்று அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், செருதூர், உள்ளிட்ட மூன்று கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற் கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகையிலிருந்து 30 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அங்கிருந்து வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் படகில் இருந்த வலை, மீன் பிடி உபகரணங்கள் என மூன்று முதல் நான்கு லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றனர்.இதனால்
காயமடைந்த மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்தனர். பின்னர் படுகாயங்களுடன் வந்த 20 மீனவர்கள் சிகிச்சைக்காக நாகை அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற் கொள்ளையர்களின் இந்த தாக்குதலை கண்டித்து செருதூர், வெள்ளப்பள்ளம், மீனவர்கள் வேலை நிறுத்தத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயத்தில் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், இழந்த பொருள்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.