தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடாகாவில் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. 52 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் 51 அடியை தற்போது எட்டியது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4,000 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கி தண்ணீர் செல்கிறது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கக் கூடும் என்பதால் அணையில் இருந்து எந்த நேரமும் கூடுதல் நீர் திறக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையேராம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.