ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!

Meenakshi
Oct 31, 2025,05:16 PM IST

சென்னை: ரூ.3,250 கோடி ஒப்பந்தத்தில் தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம்.


அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப் நிறுவனம் ஃபோர்டு.  கடந்த 2021ல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையிலிருந்து வெளியேறிய ஃபோர்டு (Ford) நிறுவனம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் தனது உற்பத்தியைத் தொடங்குகிறது. சென்னையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மறைமலைநகரில் ஃபோர்டின் ஆலையை நவீனமயமாக்கி செயல்பட உள்ளது. 


அடுத்த தலைமுறை இன்ஜின்களை தயாரிப்பதற்காக தமிழ்நாடு அரசுடன் ₹3,250 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) இன்று (அக்டோபர் 31, 2025) கையெழுத்திட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாபெரும் முதலீட்டின் மூலம், ஃபோர்டு நிறுவனம் தனது மறைமலைநகர் ஆலையில் ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான அதிநவீன இன்ஜின்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. 




இந்த உற்பத்தி பெரும்பாலும் உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அமெரிக்காவிற்கு அனுப்பப்பட வாய்ப்பில்லை என்றாலும், பிற சர்வதேச சந்தைகள் இலக்காக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2,35,000 என்ஜின்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில், 2029ம் ஆண்டு தான் உற்பத்தி தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.