தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலிக்க உள்ளேன்: செங்கோட்டையன் அறிவிப்பு

Meenakshi
Sep 03, 2025,12:40 PM IST

ஈரோடு:  செப்., 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, அதிமுக தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலக்க உள்ளேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே அதிருப்தி இருந்து வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆக்கப்பட்டதிலும், கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டதிலும் செங்கோட்டையனுக்கு பெரிதாக உடன்பாடு இல்லை என்றே சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக.,வில் இது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தொடரின் போது எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதையும், அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்காமலும் செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். இது அதிமுக கட்சியினரிடையே பேசு பொருளாக மாறியது.




அதற்கு பிறகு கட்சியில் பிரச்சனைகள் பேசி சரி செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டது. தற்போது அதிமுக, 2026 சட்டசபை தேர்தல் வேலைகளை துவக்கி, பாஜக.,வுடன் கூட்டணியை அறிவித்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து, அதிமுக அடுத்தடுத்த தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. 


இந்நிலையில் ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று தனது ஆதரவாளர்களை அழைத்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலேசானைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 05ம் தேதி மனம் திறந்து பேசுவேன். அப்போது பல முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும். அதுவரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என தெரிவித்தார். 


இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசுகையில், நாளை என்னுடைய கருத்தை தெரிவிக்கப்போகின்றேன். இந்த கூட்டம் கட்சி அலுவலகத்தில் தான் நடைபெற உள்ளது. அதிமுக தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன். கூட்டத்திற்கு யாரெல்லாம் வருவார்கள் என்பது எனக்கு தெரியாது. கட்சி நிர்வாகிகள் யாரையும் நான் அழைக்கவில்லை. நேற்று கூட யாரையும் நான் அழைக்கவில்லை. 500 பேர் அவர்களாகத்தான் வந்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.


இந்தநிலையில், அதிமுக மூத்த தலைவர்களின் செல்போன் அழைப்பை செங்கோட்டையன்  நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.