திமுக.,வில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில்
திருப்பத்தூர் : தமிழக அரசியல் களத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சித் தாவல்கள் சூடுபிடித்துள்ளன. அந்த வகையில், முன்னாள் அதிமுக அமைச்சரும், முக்கிய சிறுபான்மையின முகமுமான நிலோஃபர் கபில் இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைகிறார்.
திருப்பத்தூரில் இன்று நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நிலோஃபர் கபில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார். இதற்காக அவர் மலர்க்கொத்துடன் காத்திருக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சமீபத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர் ராஜா திமுக.,வில் இணைந்ததைத் தொடர்ந்து, நிலோஃபர் கபிலும் திமுகவில் இணைவது அதிமுகவிற்கு சிறுபான்மையின வாக்கு வங்கியில் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.
யார் இந்த நிலோஃபர் கபில்?
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மருத்துவராகப் பணியாற்றியவர். பின்னர் ஜெயலலிதாவால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 2016 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2021-ம் ஆண்டு, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாகக் கூறி அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அப்போதிலிருந்தே அவர் திமுகவில் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
நிலோஃபர் கபில் திமுகவில் இணைவது, குறிப்பாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் திமுகவின் கரத்தை வலுப்படுத்தும். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வரிசையாக திமுகவிற்குச் செல்வது, அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூக வாக்குகள் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திமுக.,வில் இணைவது குறித்து நிலோஃபர் கபிலிடம் கேட்டதற்கு,"மக்களுக்காகப் பணியாற்றவே இந்த முடிவு" என அவர் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுக.,வை பொருத்தவரை வேலூர், திருப்பத்தூர் ஆகிய தொகுதிகள் அக்கட்சியின் பலமாகவும், சிறுபான்மையினர் ஓட்டுக்களை அதிகம் பெற்றுத் தரும் மாவட்டங்களாகவும் இருந்து வருகிறது. தற்போது நிஃலோபர் கபிலின் இந்த முடிவால் இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக கடுமையான நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.