வருங்கால தலைமுறைக்கு இளையராஜாவின் இசையே அருமருந்து: அண்ணாமலை
கோவை: வருங்கால தலைமுறைக்கு இளையராஜாவின் இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இசைஞானியின் இசையின் துணைகோண்டே கடக்கிறோம் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்றே கோவை வந்தார் இசையானி இளையராஜா. தனியார் நட்சத்திர ஹோட்டலில் விளம்பரதாரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப் சார்பில் தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஹோட்டலில் தங்கியுள்ள இளையராஜாவை தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசியுள்ளார்.
அதன்பின்னர் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், கோவையில், நமது இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜா அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதை விட, மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.