Vijay Rupani: விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!

Su.tha Arivalagan
Jun 12, 2025,05:57 PM IST

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ருபானியும் பயணம் செய்த நிலையில் அவரும் இதில் உயிர் பிழைக்கவில்லை.


குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த பகுதியில் இருந்து கரும்புகை சூழ்ந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.


விமானம் புறப்பட்ட 3 நிமிடத்திலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 3000 அடி உயரத்தில் அப்போது விமானம் பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும்  இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் விமானத்திற்குள் அமர்ந்திருந்த புகைப்படமும் வெளியான நிலையில் தற்போது அவரும் இதில் உயிரிழந்துள்ளார்.




விபத்துக்குப் பிறகு விமானம் தீப்பிடித்ததாகவும், தீயை அணைக்கும் பணிக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்துள்ளதாகவும் தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்துள்ளார்.


விபத்து குறித்து குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், "அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் உடனடி சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். 


காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பசுமை வழித்தடம் அமைக்கவும், மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை ஏற்பாடுகளையும் முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்யவும் நான் உத்தரவிட்டுள்ளேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் என்னுடன் பேசியுள்ளார், முழு ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.