முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை: முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவு!

Meenakshi
Jun 20, 2025,02:04 PM IST

சென்னை: திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மருந்தக உரிமையாளர்கள் என்று பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காகச் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், திமுக அரசால் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, முதல்வர் மருந்தகம். 


கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொடக்கம் முதலே போதிய மருந்துகள் அரசால் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானது. பலமுறை கோரிக்கை வைத்தும், திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மருந்தக உரிமையாளர்கள்.




பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர். இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம். நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிக்கு, இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.