நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் உறைபனி ஏற்படும்: வானிலை மையம் தகவல்

Meenakshi
Dec 20, 2025,04:16 PM IST

சென்னை: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து கடும் பனி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக இரவு மற்றும் காலை வேலைகளில் பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,


இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.


டிசம்பர் 22 முதல் 24ம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


டிசம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


உறைபனி எச்சரிக்கை:




இன்றும், நாளையும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


இன்று (20-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


நாளை (21-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.