கெளதம் கம்பீருக்கு உண்மையான சவால் இதுதான்.. வார்னிங் கொடுத்த கங்குலி
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து சில வெளிப்படையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு இனிதான் உண்மையான சவால் காத்திருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
கம்பீரை தலைமைப் பயிற்சியாளராகக் கொண்ட இந்திய அணி சமீபத்தில்தான் தனது 3வது டி 20 உலகக் கோப்பையை வென்று அபார சாதனையைப் படைத்தது. இதையடுத்து கம்பீருக்குப் பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் கம்பீருக்கு இனிதான் சவால் காத்திருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கங்குலி கூறியுள்ளதாவது:
கம்பீரின் பயிற்சியாளர் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையப்போவது 2027-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பைதான். அங்குள்ள கடினமான ஆடுகளங்களில் அணியை வழிநடத்துவதுதான் கம்பீருக்கு உண்மையான சோதனையாக இருக்கும்.
அதேசமயம், ஆடுகளம் எப்படி இருக்கும் என்று கவலைப்படுவதை கம்பீர் நிறுத்த வேண்டும். இந்திய அணியிடம் பும்ரா, ஷமி போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, எந்த மாதிரியான பிட்ச்சிலும் நம்மால் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும் என்றார் கங்குலி.
இந்தியா இதுவரை 2 முறை 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளது. முதல் முறை கபில் தேவ் தலைமையிலும், 2வது முறை தோனி தலைமையிலும் இந்தியா கோப்பையை வென்றுள்ளது. அதன் பிறகு இந்தியாவுக்கு கோப்பை கனவாகவே இருந்து வருகிறது.
கம்பீர் குறித்து கங்குலி மேலும் கூறுகையில், கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்தியா சில தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், அவரை இப்போதே விமர்சிப்பது சரியல்ல. அவர் ஒரு திறமையான பயிற்சியாளர், அவருக்குத் தேவையான கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.