கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி

Su.tha Arivalagan
Mar 09, 2026,10:14 AM IST

அகமதாபாத்: டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள இந்த நேரத்தில் ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லட்சுமண் ஆகிய இரு பெரும் ஜாம்பவான்களை நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். உண்மையில்  இதை அவர்களுக்குத்தான் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர்.


அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. 3வது முறையாக உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. அதிலும் தொடர்ச்சியாக 2 முறை கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது.


இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களிடம் பேசியபோது பல முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.




கம்பீர் கூறுகையில், இந்த கோப்பையை ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்திய அணியை ஒரு வலுவான நிலையில் விட்டுச் சென்றதற்காக ராகுல் பாய்க்கும், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கியதற்காக லட்சுமணுக்கும் இந்த வெற்றி உரித்தானது.


எனது பயிற்சியாளர் பயணத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விகள் கடினமான காலமாக அமைந்தது. அப்போது ஜெய் ஷா எனக்கு போன் செய்து ஆதரவு அளித்தார். அது எனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்தது.


சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு நான் பொறுப்பல்ல. அதைப் பற்றி நான் கவலைப்படுவதும் கிடையாது. டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் அந்த 30 பேருக்கு மட்டுமே நான் பதில் சொல்லக் கடமைப்பட்டவன். 


பல ஆண்டுகளாக நாம் தனிநபர் சாதனைகளைத்தான் கொண்டாடி வருகிறோம். அதை நிறுத்திவிட்டு, அணிக்காக வெல்லும் கோப்பைகளைக் கொண்டாட வேண்டும். அணியின் வெற்றிகளைத்தான் நாம் கொண்டாட வேண்டும்.


கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு சிறந்த தலைவராகச் செயல்பட்டார். அணிக்கு ஒரு தந்தையாக செயல்பட்டார். எனது வேலைகளையும் எளிதாக்கினார்.  அணி எப்படி சிறந்ததாக இருக்க வேண்டுமோ அதுபோலத்தான் பயிற்சியாளரும். எனது அணி சிறப்பாக இருந்ததால் நானும் சிறந்தவனாக இருக்க முடிந்தது என்றார் கம்பீர்.