டாக்டர் ராமதாஸ் ஐசியூவில் இருப்பதால் பார்க்கவில்லை - அன்புமணி: உடனிருந்து பார்க்கிறேன் - ஜிகே மணி

Meenakshi
Oct 06, 2025,06:27 PM IST

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஐ சி யு வில் சிகிச்சை பெற்று வருவதால் பார்க்க முடியவில்லை என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறிய நிலையில், கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி ராமதாசை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து, உடனிருந்து பார்த்து வருகிறேன் என்று புகைப்படம் வெளியிட்டுள்ளார்.


கடந்த சில காலமாகவே பாமக நிறுவனர் ராமதாஸிற்கும் அவரது மகன் அன்பு மணி ராமதாஸிற்கும் இடையே பூசல் நிலவி வருகிறது. இதன் காரணமாக பாமக கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். மேலும், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக நியமித்தும் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்  ராமதாஸ். அதேபோல, அன்புமணியும், ராமதாஸின் ஆதரவாளர்களை நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்புகளில் நியமித்தும் பதிலடி கொடுத்து வந்தார்.




இந்த சூழலில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை, அன்புமணி நேரில் சென்று நலம் விசாரித்து விட்டு, செய்தியாளர்களை சந்தித்து  பேசுகையில், நேற்று மாலை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  இதயத்துக்கு செல்லும் ரத்துக்குழாய்கள் நன்றாக உள்ளன. பயப்படும்படி அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என இதய சிகிச்சை மருத்துவர்கள் தெரிவித்தனர். 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர் ஐசியுவில் இருப்பதால் பார்க்க முடியவில்லை. 6 மணி நேரம் ஐசியுவில் இருப்பார் அதன்பின்னர் சாதாரண அறைக்கு மாற்றப்படுவார். மருத்துவர்களிடம் பேசி விவரங்களை கேட்டறிந்தேன்  என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் சேர்க்கப்பட்டதிலிருந்து உடனிருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார் என்று தான் ராமதாசுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பாமக கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி.