வளம்,நோயற்ற வாழ்வு, உலக அமைதி வேண்டி... தூத்துக்குடியில் காவேரி அம்மன் வழிபாடு!
- காந்திமதி நாதன்
தூத்துக்குடி: உலக அமைதி வேண்டி தூத்துக்குடியில் சிறுமியை அலங்கரித்து, காவேரி அம்மன் வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் காவேரி நதியை போற்றும் வகையில் காவேரி அம்மன் வழிபாடு நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடபெற்று வரும் இந்த விழா, இந்தாண்டிற்கான ஐப்பசி மாதம் முதல் தேதி தொடங்கப்பட்டது. காவேரி மண், நீர் எடுத்து, கும்பத்தில் வைத்து வழிபாடு தொடங்கியது. இந்த வழிபாட்டில் மழை வளம், நோயற்ற வாழ்வு, உலக அமைதியை முன் வைத்து வழிபாடு துவங்குகின்றனர்.
காவேரி அம்மன் வழிபாடு அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத சங்கர ராமேஸ்வர் ஆலயத்தில் அருள் புரிந்து வரும் கன்னி விநாயகர் ஆலயத்தில் 60ஆண்டுகளுக்கும் மேலாக சிவ. ஆதி குடும்பத்தினர் காவேரி அன்னையை போற்றும் விதமாக
ஐப்பசி முழுவதும் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்து வருகின்றனர். விழாவின் நிறைவு நாளான ஐப்பசி மாத கடைசி நாள் அம்பாளின் திருகல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன், கும்பங்கள் அலங்கரிக்கப்பட்டு, 10 வயதுள்ள சிறுமியை அம்மனாக பாவித்து, அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடும் நடத்தப்பட்டது. அதன்பின்னர் மாவிளக்கு, சர்க்கரை பொங்கல், வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக பெண்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழா குறித்து கோமதியம்மாள் பேசுகையில், கடந்த 50 ஆண்டுகளாக காவேரி அம்மன் வழிபாடு நடத்துகிறோம். முதலில் 11 பேருடன் வழிபாடு துவங்கினோம். அம்மன் அருளால், இன்று ஒரு விழாவாக நடக்கிறது. அம்மனாக அலங்கரிக்கப்பட்ட சிறுமியை, பல பகுதிகளிலிருந்து வந்த பெண்கள் மற்றும் ஆண்கள் வழிபட்டு செல்கின்றனர். கலசத்தில் வைத்து வழிபட்ட மண் திருச்செந்தூர் கடலில் கரைக்கப்படும். வழிபட்ட மண் சமுத்திர ராஜாவுடன் சேர்ந்து மழை கொடுக்கும் என்று தெரிவித்தார்.