கண்ணீருடன் கட்டித்தழுவிய ராமதாஸ்...நல்லது நடக்கும் நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

Su.tha Arivalagan
Jun 24, 2026,06:36 PM IST

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் 61வது திருமண நாளை முன்னிட்டு, தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மனைவி, மகள்களுடன் நேரில் சென்று தாய்-தந்தையிடம் ஆசி பெற்றார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், இனி நல்லது நடக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


தைலாபுரத்தில் நெகிழ்ச்சியான சந்திப்பு:

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதியின் 61வது திருமண நாளை முன்னிட்டு, அன்புமணி ராமதாஸ் தைலாபுரத்திற்கு சென்று ஆசி பெற்றார். இதற்காக தனது குடும்பத்தினருடன் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்திற்கு அன்புமணி ராமதாஸ், தனது மனைவி செளமியா அன்புமணி மற்றும் மகள்களுடன் சென்றார். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தனது தந்தை மருத்துவர் ராமதாஸ் மற்றும் தாயார் சரஸ்வதி அம்மாள் ஆகியோரை நேரில் சந்தித்து காலில் விழுந்து வணங்கி, தம்பதியராக ஆசி பெற்றனர். இந்த சந்திப்பின் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உடனிருந்தனர்.


கட்டி தழுவி வரவேற்ற ராமதாஸ் :




மகன் அன்புமணியை, கட்டித்தழுவி டாக்டர்கள் ராமதாஸ் வரவேற்றார். கிட்டதட்ட 3 நிமிடங்கள் மகனை கட்டித்தழுவி கண்ணீர் விட்டு ராமதாஸ் அழுதுள்ளார். இது தொடர்பான போட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இதனால் பாமக.,வில் பல மாதங்களாக நீடித்து வந்த தந்தை-மகன் பிரச்சனை முடிவுக்கு வர உள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


அன்புமணி ராமதாஸ் பேட்டி:

தந்தையைச் சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: "இன்று என் தந்தையின் திருமண நாள். இந்த சிறப்பான நாளில் எனது தந்தை, தாயை குடும்பத்தோடு நேரில் சந்தித்து ஆசிகளை பெற்றோம். குடும்பத்தினருடன் இந்த நாளைக் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோரின் ஆசி எப்போதும் எங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். இனி வரும் காலங்களில் எல்லாம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று அவர் கூறினார்.


பாமக.,வில் தந்தை-மகன் மோதலால் இதுவரை நீடித்து வந்த குழப்பங்கள் இனி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாமக தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தை-மகன் சந்திப்பு நடந்துள்ளதையும் பலர் கொண்டாடி வருகின்றனர்.