தமிழகம் பற்றிய கவர்னரின் கருத்து...மிக கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்துப் பேசி இருக்கிறார் ஆளுநர் ரவி. அவரது திமிரை நாம் அடக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழர்களை தேசவிரோதிகள் என சித்தரித்து ஆளுநர் ரவி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களை தீவிரவாதிகள் என்பது போல சித்தரித்து பேசியிருக்கிறார். அவர் வகிக்கும் அரசியல் சாசன பதவிக்கு, துளியும் பொருத்தமற்ற தரக்குறைவான பேச்சு இது. எங்க பசங்க உலக வாய்ப்புகளுக்காக ஆங்கில மொழியை படிக்கிறாங்க. அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு எங்க எரியுது?
அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசியிருக்கிறார் ஆளுநர் ரவி. அவரது திமிரை நாம் அடக்க வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சியில் தான் பஹல்காம் தாக்குதல், டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தீவிரவாத தாக்குதலில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத அரசை ஆளுநர் புகழ்கிறார்.
வட மாநிலங்களில் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கிறார்கள். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கிறது. தமிழகத்திற்கான திட்டங்கள் நிராகரிக்கும் போது மட்டும் மத்திய அரசு கம்பி கட்டும் கதை சொல்கிறது. ஒவ்வொரு முறை பிரதமரை சந்திக்கும்போதும் புதிய ரயில்பாதை திட்டங்கள் குறித்த கோரிக்கையை முன்வைப்பேன். திமுக அரசு எதைக்கேட்டாலும் தரக்கூடாது என மத்திய பாஜக அரசு முடிவு செய்துவிட்டது. வரி வசூலிப்பதற்கு மட்டும் தமிழ்நாடு, நிதி ஒதுக்கும்போது பட்டை நாமம் போடுகிறது பாஜக அரசு.
SIR மூலம் மக்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள். வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ளுங்கள் அதுதான் மிகவும் முக்கியம். தந்தை பெரியார் இல்லை என்றால் திராவிட இயக்கம், பேரறிஞர் அண்ணா , கலைஞர் இல்லை. தமிழ்நாட்டுக்கு இந்த அளவு வளர்ச்சியும் இருந்திருக்காது. தமிழ்நாடு விவசாயிகளின் நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கைக்காக பிரதமரை சந்திக்கிறேன் என பழனிசாமி சொன்னால், தமிழ்நாடு அரசின் சார்பில் நானே கார் ஏற்பாடு செய்து தருகிறேன். அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல கார் தந்து அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.