குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள்

Su.tha Arivalagan
Jan 26, 2026,09:55 AM IST

சென்னை: 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று (ஜனவரி 26) ‘கிராம சபை’ கூட்டங்கள் நடைபெறுகின்றன. கிராமப்புற வளர்ச்சி மற்றும் மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.


இன்று நடைபெறும் இந்த கிராம சபை கூட்டங்களில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக, கிராம ஊராட்சிகளின் வரவு - செலவு கணக்குகளை பொதுமக்களின் முன்னிலையில் தாக்கல் செய்தல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்தல், 

தூய்மை பாரத இயக்கம் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்த திட்டங்கள், ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றுதல் உள்ளிட்டவை இதில் இடம் பெறும்.




இதுதவிர கிராமங்களுக்குத் தேவையான விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.


ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கிராம சபை கூட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கூட்டங்கள் நடைபெறும் நேரம் மற்றும் இடம் குறித்து அந்தந்த ஊராட்சி அலுவலகங்கள் மூலம் ஏற்கனவே பொதுமக்களுக்குத் தண்டோரா போட்டும், நோட்டீஸ் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், ஊராட்சியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் இந்த கிராம சபை கூட்டங்கள் மிக முக்கியமானது என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், மக்களாட்சியின் அடித்தளமான கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.