தெரு நாய்களுக்காக.. டெல்லி முதல்வரை கத்தியால் குத்தவும் திட்டமிட்டிருந்த ராஜேஷ் சக்ரியா!
டெல்லி: டெல்லியிலிருந்து தெருநாய்களை அகற்றக் கூடாது என்று தான் விடுத்த வேண்டுகோள்கள் குறித்து எந்த பதிலும் அளிக்காததால்தான் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்க முயன்றுள்ளார் குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என்று தெரிய வந்துள்ளது. அத்தோடு அவர் முதல்வரை கத்தியால் குத்தவும் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த 41 வயதான சக்ரியா, டெல்லி முதல்வர் ரேகா குப்தாவைத் தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில், டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து, குடியிருப்புப் பகுதிகளுக்கு வெளியே உள்ள காப்பகங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக நாய் ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தினர். சக்ரியாவும் நாய்கள் மீது பிரியம் கொண்டவர். அவருக்கும் இந்த உத்தரவு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து இதற்கு எதிராக வினையாற்ற முயன்றுள்ளார் அவர்.
உச்சநீதிமன்றத்தில் தனது போராட்டத்தை நடத்து முடிவு செய்து அங்கு போயுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இருந்த கடும் பாதுகாப்பைக் கண்ட சக்ரியா, அங்கிருந்து ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள முதல்வரின் இல்லத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, முதல்வர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். உண்மையில் அவர் முதல்வரை கத்தியால் குத்தித் தாக்க திட்டமிட்டுத்தான், சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
ஆனால் முதல்வர் இல்லத்தில், மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் இருந்த பாதுகாப்பைக் கண்டு கத்தியை தூக்கி எறிந்துவிட்டார். பின்பு, மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியின் போது முதல்வரிடம் மனு கொடுப்பது போல நெருங்கிச் சென்று ரேகா குப்தாவை அறைந்து, தள்ளிவிட்டு, அவரது தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார்.
ரேகா குப்தாவை தாக்கிய வழக்கில், ராஜேஷ் சக்ரியாவின் நண்பரான தாசீன் சையத் என்பவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சையத், சக்ரியா இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரித்த போலீஸார், சையத்தை நேற்று கைது செய்தனர். தாக்குதலுக்கு முன், சையத், சக்ரியாவிற்கு பணம் அனுப்பியுள்ளார், மேலும் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். சக்ரியா, முதல்வர் ரேகா குப்தாவின் ஷாலிமார் பாக் இல்லத்தின் காணொளியை சையத்திற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.