Poet Vairamuthu: கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீட விருது அறிவிப்பு

Su.tha Arivalagan
Mar 14, 2026,04:14 PM IST

சென்னை: இந்திய இலக்கியத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஞானபீட விருது, இம்முறை பிரபல தமிழ் கவிஞரும், எழுத்தாளருமான கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாளிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது தமிழ் இலக்கிய உலகைக் கொண்டாட வைத்துள்ளது.


இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்காக ஆண்டுதோறும் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டிற்கான இந்த விருது வைரமுத்துவின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் அவருக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான மைல்கல்லாகும். இதற்கு முன்னதாக, 


1975-ல் எழுத்தாளர் அகிலன் (சித்திரப்பாவை நாவலுக்காக) முதன்முதலில் ஞானபீட விருதைப் பெற்றார். 2002-ல் இலக்கியச் சிதறல் ஜெயகாந்தன் இந்த விருதைப் பெற்றுப் பெருமை சேர்த்தார்.


தற்போது, நீண்ட இடைவேளைக்குப் பிறகு (சுமார் 24 ஆண்டுகள் கழித்து) வைரமுத்து இந்த விருதைப் பெறுவதன் மூலம், ஞானபீட விருதைப் பெறும் மூன்றாவது தமிழ் ஆளுமை என்ற சிறப்பை எட்டியுள்ளார்.




வைரமுத்துவின் இலக்கியப் பயணம் :


தேனி மாவட்டம் வடுகபட்டியில் பிறந்த வைரமுத்து, தனது காவியங்கள் மற்றும் நாவல்கள் மூலம் தமிழ் மொழியில் புதிய தடத்தைப் பதித்தவர். 'கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்', 'மூன்றாம் உலகப் போர்' போன்ற இவரது படைப்புகள் எளிய மக்களின் வாழ்வியலையும், அறிவியலையும் சமகாலப் பிரச்சினைகளையும் ஒரு சேரப் பேசின. ஏற்கனவே பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ மற்றும் பலமுறை தேசிய விருதுகளை வென்றுள்ள இவருக்கு, தற்போது கிடைத்துள்ள ஞானபீட விருது அவரது எழுத்துப் பணிக்குக் கிடைத்த உச்சபட்ச அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.


சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள் :


இந்தச் செய்தி வெளியானதில் இருந்தே அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் வைரமுத்துவிற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். "தமிழ் மொழிக்கும், தமிழினத்திற்கும் கிடைத்த பெருமை இது" எனப் பலரும் புகழ்ந்து வருகின்றனர். தனக்கு ஞானபீட விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.