அமுதமாய் மனம் நிறைந்த கோபாலனே.. பார்த்தனின் பார்த்தசாரதியே.. புருஷோத்தமனே!
- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
திருவரங்கஹரி தித்திக்கும்ஹரி
நறுமங்கையின் நம்பெருமாள்ஹரி
நறுநெய் பால் தயிரில் ஊறியஹரி
உறிவெண்ணெய் களவாடியஹரி
ஏழுபிரகாரத்தில் எழாமல்
யோகுதுயில் துயிலும் மாமாயஹரி
திருமங்கையாழ்வாரோ நம் கலியனோ
திருமந்திரத்தை திருமாலிடம் கற்ற கலியனோ
ஆடல்மா நாயகனோ
குமுதவள்ளியின் மணவாளனே
திருசிறு பெரியமடலூறிய
திருமங்கமன்னனே மனம் சிந்தித்து
வீரவடிவே தவழ்கிறது
அவணியோர் வணங்கும் வடிவழகியநம்பியே!
அமுதமாய் மனம் நிறைந்த கோபாலனே!
பார்த்தனின் பார்த்தசாரதியே!
அகலிடம் விட்டு புகலிடம் வந்தோம் புருஷோத்தமனே!
கல்பகவள்ளியுடனே
புள்ளூர்ந்தே பவணி வருகிறாய்!
கல்மாரி காத்தாய் கண்ணா! பல்லாண்டு! பல்லாண்டு!
உள்ளம் உகந்த உப்பிலியனே
கள்ளமில்லா ஒப்பிலியப்பா
சலனமிலா மனம் தந்து தாங்கிடுவாய்
இப்புவியோரையே வல்லாரை வாழ்த்தும் வலம்புரியே
வருவாய் வந்தென் மனம்புகுந்தாய் மாலுற்றேன் மாதவா
பரகாலனோ கலியனோ
நீலனோ மங்கையர்கோனோ
அருள்மாரியோ ஆலிநாடனோ
நாலுகவிப் பெருமாளோ
கலி த்வம்சினோ கவிலோக திவாகரனோ
சதுஷ்கவி சிகாமணியோ கலிவைரியனோ
திருநாவீறுடைய பெருமானே
நின் திருநாமங்கள் திகழும்
திருமாலின் பெருமையே
கோதண்டஹரி கோபாலஹரி
கோவர்த்தனஹரி கோசலைஹரி
கோபியர்ஹரி கோவலஹரி
கோலஞ்செயதிரு கோவில்ஹரியே
ரகுபதி ராகவ ராஜாராம்
சகலமும் நீயே சீதாராம்
குகனை சோதரனாய் ஏற்றவனே
மகிதலம் போற்றும் கேசவனே
அகல்யையின் சாபம் தீர்த்தவனே
பகலவன் குலத்தில் உதித்தவனே
கைகேயி வரங்களை ஏற்றவனே
புகலிடம் அனுமனுக்களித்தவனே
பார் போற்றும் பார்த்தசாரதியைக் கேசவனை..
தேரோட்டியின் புகழைப் பாடித் துதித்தேன்!
கார்வண்ணமேனியனைக் கடல்வண்ண உத்தமனை
கண்ணனை அதிகாலை கதியருளில் கண்டு கண்பனித்தேன்!
இன்றென்ன பாட கேசவா..
என்றே சிந்தித்துக் களைத்தேன் மாதவா..
அன்று குன்றேந்தி குவலயம் காத்ததயோ!
வென்றரக்கர் பலரை கொன்றழித்ததயோ வராக வடிவாய் சென்றுலகை மீட்டதயோ!
சென்றிலங்கையரக்கன் கதை முடித்ததயோ!
முன் நின்று தேரேறி பாரதப்போர் புரிந்ததயோ!
என்றும் அரவணையில் நீயுறங்கும் காட்சியையோ பாடவா பாற்கடலனே!
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)