நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

Su.tha Arivalagan
Dec 04, 2025,01:17 PM IST

- கோ. அறிவுசெல்வி இராஜாராம்


நாளெல்லாம்  ஹரிநாமம்!  

மனமெல்லாம் மாதவஹரி! 

நாவெல்லாம் கேசவஹரி! 

அகமெலாம்  ஆதிமூலஹரி 

காலமெலாம் நினைந்து 

நைந்து உருகிடுவேனே! 

கோபாலஹரியே!


உப்பிலியப்பனே உலகம் உகந்தோனே! 

உப்பை  உதாசித்தவனே!

உகப்பவர் உள்ளம் உகந்தோனே! 

உவகையுடன் உபநிடதமுடன்

உத்தமிநாயகியுடன் உலகமளக்க உயர்ந்தோனே! 

உயர்வற உயர்நலமுடன் உடுக்கையிழந்தவளை  

உவப்புடன் காத்தவனே! 

உன்னடியார் உய்யவே 

உன்திருவடியில் உள்ளோமப்பா!




வினதையின் புதல்வனைப் பறவையரசனை 

மறையுருவானவனை மனமாரத்துதித்தேன்                                                         

தனம் தரும் திருமகளைத் தன் மார்பில் தாங்கும்

அனந்தசயனுக்கு பல்லாண்டு! பல்லாண்டு!


தினகர குலத்தோனே! கோசலைப் புதல்வனே!                 

அனங்கனைப் பிரமனைப் படைத்த கேசவனே!

ஜனகனின் புதல்வி ஜானகியை மணந்தவனே!

தனம் புகழ் பதவி எதுவும் வேண்டேன்

உனையடையும் பேறொன்றே! 

விரும்பியுன் பதம் பணிநதேனுன்னையே..


காவலாய் இதயமதிலிருந்து 

தத்தாலாங்கு தத்தாலாங்கு ஆடும் ஆராவமுதனே 

ஆடுமுன் ஆட்டத்துக்கு ஆடும் ஆய்ச்சியானே 

அசராமல் பெருமையுடன் பொருத்திடுவேன் பேரருலாளா


அற்புதமாக ஹரிநாமம்பாடி 

கற்பகக்கண்ணன் ஹரியை நினைந்து 

மற்றற்ற உயர்நிலையடைந்து 

பற்பல நன்மைகளை பெற்று 

பற்றற்று பகவான் பதம் பணிந்து பாகவதனாவோம்!


அல்லலகற்றும் அமுதனே!

உள்ளம் உகந்த உத்தமா 

மாலவனாய் மனதில் நின்றாயே 

நீலமேகனே அரிபரியாய் புள்ளூர்ந்து 

ஆணையைக் காத்த ஆதிமுலமே 

நாகம்மீது நட்டமாடிய நாரணா 

நாடியெங்கள் துயர்களையும் காகுத்தனே! 

பல்லாண்டு பல்லாண்டு


பெருமாலைத்தொழுதேத்தி அம்மானை அழகனை 

திருமாலையம்மானை  கற்பகத்தை கண்ணனை 

வரும் மானம் தவிர்க்கும்  தாமோதரனை 

தாலாளனை தருமா மாமுகிலை பிரியாது 

அடைந்துய்ந்துப்போனேனே அடியேன்


அனந்தபத்மநாபனைத் துதித்தேன்

அனந்தங்காடு வாவெனச் சொன்ன

கேசவனை            

சனகாதி முனிவரும் நரர் சுரரிந்திரனும்

நான்முகனும் நான்மறையும் கரம் பணிந்தேத்தும்                 

தனக்கென சரிநிகர் சமானமில்லாத

தனிப்பெருங்கடவுளை கேசவனை மாதவனை

மனதிலே தொழுதேன்!


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)