தமிழ்த் தாயின்‌ புதல்வன்!

Su.tha Arivalagan
Sep 12, 2026,02:58 PM IST
- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச் செல்வி 

தமிழைப் படித்துத்தான் சுவைக்க வேண்டும்...
என்ற விதிகளைத் தளர்த்தியவன்!

மேடையில் பேசினால் பாமரனும்...
தமிழின் சுவையினை திளைத்திடச் செய்தவன்!

மதுரைத் மண்ணின்  தமிழ் மைந்தன்!
 பட்டிமன்றத்தின்  இளவரசன்  அவன்!

எளிய தமிழால் உலகத்தை வென்று,
எங்கள் நெஞ்சங்களிலும் சிம்மாசனம் அமைத்து...



சிரிப்பிலும் சிந்தனை விதைகளை விதைத்து,
சின்னச் சின்னக் கதைகளால் உள்ளத்தைக் கவர்ந்து,

தமிழுக்கு ஒரு புதிய முகம் தந்தாயே!
இன்று நீயின்றி மேடைகள் மௌனத்தில் அழுகிறதே!

காலம் உன்னை மறைத்தாலும்,
உன் குரலின் கம்பீரம் மறையாது!

தமிழ் மொழி உள்ளவரை,
சாலமன் பாப்பையாவின் பெயர் அழியாது!

வீழ்ந்தது உனது உடல்தான் ஐயா...
வாழ்வது உனது தமிழ்த்தொண்டே!

எங்கள் கண்ணீர்ப் பூக்களால்...
உனக்கு எம் நெஞ்சார்ந்த இறுதி அஞ்சலி!

மாளாத் துயரோடு!

(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா ‌ போன்ற 30 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்)