தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்ப அலை இருக்கும்.. 4 நாட்களுக்கு மழையும் உண்டு - வானிலை மையம்

Manjula Devi
Apr 27, 2024,05:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீச கூடும் எனவும், அதே நேரத்தில் ஏப்ரல் 30 முதல் நான்கு நாட்கள் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வெப்ப அலையை அடுத்து 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் வானிலை மையம் விடுத்துள்ளது.


கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் வெயிலும்,, மழையும் மாறி மாறி நிலவிக் கொண்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். ஒருபுறம்  அதிகபட்சமாக 100 டிகிரியை தாண்டியும் வெயில் கொளுத்தி எடுக்கிறது. மறுபுறம் ஒரு சில இடங்களில் மழை பெய்தும் வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் காலகட்டமாக மே மாதத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும் எனவும், அதே நேரத்தில் பரவலாக மழை பெய்யும் எனவும் தமிழ்நாடு  வெதர்மேன் நேற்று அறிவித்திருந்தார்.




இந்த நிலையில் இன்று முதல் வெப்ப அலைத் தாக்குதல் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதே நேரத்தில் ஏப்ரல் 30 மே 1, 2, 3, ஆகிய நான்கு நாட்கள் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.


ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி,சேலம், கள்ளகுறிச்சி, ஈரோடு, நாமக்கல்,கோவை, திருப்பத்தூர், கரூர், மதுரை, சிவகங்கை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


இது தவிர மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, ஆகிய மாவட்டங்களிலும் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.