ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மார்ச் 23 முதல் 28-ம் தேதி வரை வரலாறு காணாத மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகப் பிரபல வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்துள்ள அப்டேட்:
துபாயின் சராசரி ஆண்டு மழையளவே சுமார் 100 மி.மீ தான். ஆனால், சமீபகாலமாக வெறும் 2 முதல் 3 நாட்களில் கொட்டித் தீர்க்கும் தீவிர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
ஜனவரி 2020ம் ஆண்டு, 24 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழை பதிவானது. அதாவது அல் ஐன் பகுதியில் 190.4 மி.மீ மழை பதிவானது.
ஜூலை 2022ம் ஆண்டு, 27 ஆண்டுகளில் இல்லாத மழையாக புஜைரா பகுதியில் 255.2 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது.
ஏப்ரல் 2024ல், 75 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுப் பெருமழையாக அல் ஐன் பகுதியில் 254.8 மி.மீ மற்றும் துபாயில்- 142 மி.மீ மழை பெய்தது.
இப்போது இந்த ஆண்டு மார்ச் மாதமும் இந்த பெருமழைப் பட்டியலில் இணையவுள்ளது. 2020 முதல் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமீரகம் இதுபோன்ற அதீத மழைப்பொழிவைச் சந்தித்து வருகிறது. இந்த மார்ச் 2026 நிகழ்வு, ஏப்ரல் 2024-ல் பெய்த மழையை விட அதிகமாகவோ அல்லது அதற்கு நிகராகவோ இருக்க வாய்ப்புள்ளது.
வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்படும் வலுவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, அமீரகத்தின் வான்பரப்பில் மேகங்கள் திரண்டு வருகின்றன. குறிப்பாக, காற்றோட்டங்கள் ஒன்றிணையும் "Turning Zone"-ல் இந்த பிராந்தியம் அமைந்திருப்பதால், 150 முதல் 200 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதிப்புகள்,
குறுகிய நேரத்தில் கொட்டும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்குதல், கட்டமைப்புகளில் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட வாய்ப்பு போன்றவை ஏற்படலாம்.
இந்த அதீத மழை ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமின்றி, பஹ்ரைன், தோஹா, மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவின் பல பகுதிகளிலும் வெளுத்து வாங்கப்போகிறது.