டெல்லியை புரட்டிப் போட்ட கன மழை.. மோசமான வானிலை.. விமானப் போக்குவரத்து பாதிப்பு

Su.tha Arivalagan
Aug 09, 2025,12:06 PM IST

டெல்லி: மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். குறிப்பாக, 182 விமானங்கள் புறப்படுவதிலும், 30 விமானங்கள் வந்து சேருவதிலும் தாமதம் ஏற்பட்டது. 


டெல்லியில் கன மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவை இருந்தால் மட்டும் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என காவல்துறை எச்சரித்துள்ளது.


டெல்லி விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 182 விமானங்கள் புறப்படுவதிலும், 30 விமானங்கள் வந்து சேருவதிலும் தாமதம் ஏற்பட்டது. விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன் விமானத்தின் நிலையை சரிபார்க்கவும் என்று கூறியுள்ளன. 




IndiGo நிறுவனம் X தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், Delhi பயணிகளுக்கு ஒரு தகவல்! இன்றைய மழை காரணமாக, டெல்லியில் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. சில சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன. விமான நிலையத்திற்கு செல்லும் முன் கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். முடிந்தால் வேறு வழியில் செல்லுங்கள். எங்கள் இணையத்தளம் அல்லது செயலியில் உங்கள் விமானத்தின் நிலையை சரிபார்க்கவும். உங்கள் பயணத்திற்கு உதவ எங்கள் குழு தயாராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.


இதேபோல SpiceJet நிறுவனமும் டெல்லியில் மோசமான வானிலை மற்றும் பலத்த மழை காரணமாக, விமானங்கள் புறப்படுவதும், வந்து சேருவதும் பாதிக்கப்படலாம். பயணிகள் தங்கள் விமானத்தின் நிலையை சரிபார்த்துக் கொள்ளவும் என்று கூறியுள்ளது.


டெல்லி போக்குவரத்து காவல்துறை விடுத்த அறிவிப்பில், ரக்ஷா பந்தன் பண்டிகை காரணமா, சனிக்கிழமை அன்று டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக டெல்லியை விட்டு மக்கள் பலர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக NH-44 மற்றும் சிங்கு எல்லைப் பகுதிகளில் அதிக நெரிசல் இருக்கும். எனவே, வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.