கோவை, நீலகிரிக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
சென்னை: தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழைக் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமைழக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மற்றும் கோவையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேலும், அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைய கூடும் எனவே இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 18ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 19ஆம் தேதி 22 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.