தமிழகத்தில் ஜூன் 10,11,12 ஆகிய 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் ஜூன் 10,11,12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக ஜூன் 10, 11, 12 ஆகிய நாட்களில் மழை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூன் 6 முதல் 8 வரை தமிழகத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 9 மற்றும் 10ம் தேதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை ஏற்படலாம். இதனால், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் சாத்தியம் அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 11 மற்றும் 12ம் தேதிகளில் தமிழகத்தில் பல பகுதிகளில் லேசான மழை தொடரும். குறிப்பாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
ஜூன் 9 மற்றும் 10 தேதிகளில் தென்தமிழக கடலோரம், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.