தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

Meenakshi
Dec 16, 2025,03:50 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில், கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது.


இந்த நிலையில், இன்று வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 




இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய்க்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும்.


டிசம்பர் 18ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


டிசம்பர் 19 முதல் 21 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்..


டிசம்பர் 22 தமிழகத்தில் ஓரிரு இடங்களில, புதுவை மற்றும் காரைக்கல் பகுதிகளிலும் லேசானது முதல் மித மான  மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


இன்று (16-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


நாளை (17-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.