டெல்லியை உலுக்கிய கடும் காற்று பேய் மழை .. 4 பேர் பலி.. 200 விமானங்கள் மற்றும் ரயில்கள் தாமதம்!
டெல்லி: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியப் பகுதிகளில் பேய்க்காற்றுடன் திடீர் கனமழை பெய்தது. இதனால் இன்று காலை சுமார் 200 விமானங்கள் தாமதமாகின. டெல்லியின் துவாரகா பகுதியில் மரம் விழுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர்.
பேய் மழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த மூன்று விமானங்கள் அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன. பெங்களூரு-டெல்லி மற்றும் புனே-டெல்லி விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்களில் அடங்கும்.
டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் வருவதற்கு சராசரியாக 21 நிமிடங்களும், புறப்படுவதற்கு 61 நிமிடங்களும் தாமதம் ஏற்பட்டது. விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன் பயணிகளின் விமான நிலையைச் சரிபார்க்குமாறு விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. பலத்த காற்று காரணமாக மரங்கள் விழுந்ததால் 15 முதல் 20 ரயில்கள் தாமதமாகின.
இதுகுறித்து டெல்லி அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறுகையில், இன்று, பருவமழை இல்லாத காலத்தில் பெய்த அதிகப்படியான மழையால், டெல்லியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. காலை 5:30 மணி முதல் பல இடங்களுக்குச் சென்று நிலைமையைக் கண்டறிந்தேன். மின்டோ பாலத்திற்குச் சென்றபோது, நான்கு பம்புகளும் செயல்படவில்லை என்று கூறியுள்ளார்.
துவாரகா, கான்பூர், சவுத் எக்ஸ்டென்ஷன் ரிங் ரோடு, மின்டோ ரோடு, லஜ்பத் நகர் மற்றும் மோதி பாக் போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் ஏற்பட்ட சேதங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை. வானிலை நிலவரத்தை அறிந்து, முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் வெப்பநிலை 19.8 டிகிரி செல்சியஸாக இருந்தது. இதற்கிடையே டெல்லியில் 70-80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மணி நேரத்தில், சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 77 மிமீ மழை பதிவாகியுள்ளது. லோடி ரோட்டில் 78 மிமீ, பாலத்தில் 30 மிமீ, நஜஃப்கரில் 19.5 மிமீ மற்றும் பிதம்பராவில் 32 மிமீ மழை பதிவாகியுள்ளது. சனிக்கிழமை வரை டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று IMD தெரிவித்துள்ளது. வட இந்தியாவில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும். இதனால் வெப்பநிலை மே 2024 இல் இருந்த அளவை விட அதிகரிக்க வாய்ப்பில்லை என்று IMD தெரிவித்துள்ளது.