இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் கனமழை.. நிலச்சரிவில் மூன்று பேர் பலி

Su.tha Arivalagan
Sep 16, 2025,12:08 PM IST

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று பேர் உயிரிழந்தனர். மண்டியில் ஏற்பட்ட இந்த விபத்தில் இரண்டு பேர் காப்பாற்றப்பட்டனர். 


இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நிஹ்ரி பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது பாறை சரிந்து விழுந்ததில் அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. இதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.


மண்டி மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்குள்ள பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சோன் காட் நதி திடீரென பெருக்கெடுத்து ஓடியதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.




நள்ளிரவுவாக்கில், வெள்ள நீர் பேருந்து நிலையத்திற்குள் புகுந்தது. அரசு பேருந்துகள் மற்றும் கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் உட்பட பல தனியார் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சோன் காட் நதியின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருகிறது. காவல்துறையினரும், நிர்வாகத்தினரும் தொடர்ந்து களத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை  உயிரிழப்புகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதிகாரிகள் அதை உறுதிப்படுத்தி வருகின்றனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.


வெள்ளம் காரணமாக வீடுகள் மற்றும் கடைகளுக்குள் சேதம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்கள் தங்கள் வீடுகளின் கூரைகளில் ஏறி தஞ்சம் அடைந்தனர். சுமார் 150 மாணவர்கள் தங்கியிருந்த விடுதியும் வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால் அனைத்து மாணவர்களும் மேல் தளங்களுக்கு சென்றுவிட்டனர். 


இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 20 முதல் பெய்து வரும் கனமழையால் இதுவரை 404 பேர் உயிரிழந்துள்ளனர். SDMA திங்களன்று வெளியிட்ட அறிக்கையின்படி, மழை தொடர்பான சம்பவங்களில் 229 பேரும், சாலை விபத்துகளில் 175 பேரும் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம், மூழ்கி இறத்தல், மின்சாரம் தாக்கி இறத்தல், மின்னல் தாக்கி இறத்தல் மற்றும் வீடு இடிந்து விழுதல் போன்ற காரணங்களால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக SDMA தெரிவித்துள்ளது.


மண்டி மாவட்டத்தில் 37 பேரும், காங்க்ரா மாவட்டத்தில் 34 பேரும், குலு மாவட்டத்தில் 31 பேரும், சம்பா மாவட்டத்தில் 28 பேரும், சிம்லா மாவட்டத்தில் 23 பேரும் மழை தொடர்பான விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இந்த மாவட்டங்கள் தான் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.