புனித வாரம் தொடங்கியது.. தமிழ்நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

Su.tha Arivalagan
Mar 29, 2026,12:58 PM IST
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய வாரம், ஒரு கழுதைக் குட்டியின் மீது ஏறி எருசலேம் நகருக்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் தங்கள் ஆடைகளையும், ஈச்ச மரக் கிளைகளையும் (குருத்தோலைகள்) வழியில் விரித்து, "ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுகிறார்!" என்று ஆர்ப்பரித்து அவரை ஒரு அரசரைப் போல வரவேற்றனர். இந்த நிகழ்வையே குருத்தோலை ஞாயிறு நினைவுபடுத்துகிறது.

தேவாலயங்களில் குருத்தோலைகளைப் புனிதம் செய்து, கைகளில் ஏந்தி பாடல்கள் பாடி ஊர்வலமாகச் செல்வார்கள். இந்நாளில் இருந்து இயேசுவின் பாடுகளையும், இறப்பையும் தியானிக்கும் புனித வாரம் தொடங்குகிறது.




பவனியில் பயன்படுத்தப்படும் குருத்தோலைகளைச் சிறு சிலுவைகளாகச் செய்து வீடுகளில் வைத்துக்கொள்வது பலரது வழக்கம். இந்த ஆண்டு பயன்படுத்தப்படும் குருத்தோலைகள் காய்ந்த பிறகு சேகரிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு 'சாம்பல் புதன்' திருநாளில் நெற்றியில் பூசப்படும் சாம்பலாக மாற்றப்படும்.

இது மனத்தாழ்மையின் வெற்றியைப் பறைசாற்றும் நாளாகக் கருதப்படுகிறது. ஒரு மாபெரும் அரசர் குதிரையில் வராமல், அமைதியின் அடையாளமான கழுதையில் வந்ததை இது உணர்த்துகிறது.

தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் இன்று குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.

புகைப்படம்: தே. ஜெனிட்டா ரீனா