கவின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல்!

Meenakshi
Aug 04, 2025,07:06 PM IST

தூத்துக்குடி : காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.


கவின், சுபாஷினி இருவரும் காதலித்து வந்த நிலையில், சுபாஷினியின் சகோதரன் சுர்ஜித்,  கவின் தனது அக்காவுடன் பழகிய ஆத்திரத்தில், கவினை ஆணவக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததாக கவினின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.


இந்த வழக்கில் சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  சுர்ஜித் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பெற்றோர்களையும் கைது செய்ய கவினின் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி,  அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டம் நடத்தி வந்தனர். 




இதனையடுத்து, இந்த வழக்கில் சுர்ஜித்தின் தந்தையும் கைது செய்யப்பட்டார். சுர்ஜித்தின்  தாயையும் கைது செய்ய வேண்டும் என்று கவினின் உறவினர்கள் கூறி வந்தனர். இதற்கிடையில், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கவினின் உடலை பெற்றுக்கொள்ள கவினின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து,  கவினின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.


இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் தனியார் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்கி வைக்க வந்துள்ள  முதல்வர் மு.க.ஸ்டாலின் கவினின் பெற்றோர், சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.