அதிமுக ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ணன் ரெட்டி

Su.tha Arivalagan
Jul 09, 2026,11:46 AM IST

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று (09.07.2026) கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும் தேர்தல்கள் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) பாலகிருஷ்ணன் ரெட்டி பங்கேற்காதது தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாகவே மாவட்டவாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் இன்று, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவை வலுப்படுத்துவது மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.


மாவட்டத்தின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்ட நிலையில், ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பாலகிருஷ்ணன் ரெட்டி இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார். கட்சியின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத்தின் முக்கியப் பிரதிநிதியான எம்.எல்.ஏ-வே பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


பாலகிருஷ்ணன் ரெட்டியின் இந்த அதிருப்திக்கு பின்னால் இருக்கும் உட்கட்சி அரசியல் காரணங்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. கடந்த காலங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, பாலகிருஷ்ணன் ரெட்டியின் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்திருந்தது.இதன் காரணமாக, அவரிடமிருந்த செல்வாக்கு மிக்க 'மாவட்டச் செயலாளர்' பதவி பறிக்கப்பட்டது.




அதன்பின்னர், அவர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியில் தன்னை இணைத்துக் கொண்ட போதிலும், அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்படவில்லை. மாறாக, முக்கியத்துவம் குறைந்த 'அமைப்புச் செயலாளர்' பதவி மட்டுமே வழங்கப்பட்டது. தனக்குத் தகுதியான மற்றும் தற்போதைய அதிகாரமிக்க பதவி வழங்கப்படாததால் அவர் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.


மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, அமைப்புச் செயலாளர் பதவி மட்டுமே கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மனக்கசப்பே அவர் இன்றைய கூட்டத்தைப் புறக்கணித்ததற்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவிற்குள் இருக்கும் கோஷ்டி பூசலையும், அதிருப்தியையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.


எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டத்தை அவர் புறக்கணித்துள்ளதால் அடுத்து பதவியை ராஜினாமா செய்ய போகும் எம்எல்ஏ., இவர் தானா? இவரும் தவெக.,வில் சென்று இணைவாரா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுப்பப்பட்டு வருகின்றன.