பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

Su.tha Arivalagan
Feb 10, 2026,12:48 PM IST

லாகூர்: 2026 டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியா - பாகிஸ்தான் மோதல் திட்டமிட்டபடி நடக்கும் எனத் தெரிகிறது. முன்னதாக இந்தியாவைப் புறக்கணிப்பதாக வீரவசனம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தனது நிலையில் இருந்து பின்வாங்கியுள்ளது.


வங்கதேச அணி பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா வர மறுத்ததால், அந்த அணி உலகக் கோப்பையில் இருந்து நீக்கப்பட்டு ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, நாங்கள் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால், ஐசிசி அனுப்பிய ஒரு காட்டமான கடிதம் பாகிஸ்தானின் பிடிவாதத்தைத் தளர்த்தியுள்ளது.


பாகிஸ்தானை பணிய வைத்த ஐசிசி-யின் செக் பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணித்தால் ஏற்படப்போகும் கடுமையான விளைவுகளை ஐசிசி பட்டியலிட்டுள்ளது. பல கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்படும், போட்டியில் விளையாடாமல் போனால் இந்தியாவுக்கு வெற்றிப் புள்ளிகள் வழங்கப்பட்டு, பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறும் அபாயம் ஏற்படும், ஐசிசி உறுப்பினர் தகுதியை தற்காலிகமாக நீக்கவும், வருடாந்திர வருவாய் பங்கீட்டை நிறுத்தவும் ஐசிசி எச்சரித்துள்ளது.




ஜியோஸ்டார் போன்ற ஒளிபரப்பு நிறுவனங்கள் நஷ்டஈடு கோரி சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.


பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். பாகிஸ்தான் அரசுடன் ஆலோசித்து இறுதி முடிவை இன்னும் 24 மணிநேரத்தில் அறிவிப்போம் என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், ஐசிசி-யின் நெருக்கடியால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராகக் களமிறங்குவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.


இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு பெறுவதும், பிறகு ரசிகர்களுக்காக மீண்டும் வருகிறேன் என்று பல்டி அடிப்பதும் வழக்கமானதுதான். இப்போது கிரிக்கெட் வாரியமும் அதையே செய்கிறது என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.