சளி, காய்ச்சல் ஓட ஓட விரட்டும்.. அருமருந்து.. மிளகு கஷாயம்!

Su.tha Arivalagan
Feb 12, 2026,11:02 AM IST

- ச. சுமதி


குளிர்காலமோ அல்லது திடீர் காலநிலை மாற்றமோ, பலரையும் முதலில் தாக்குவது சளி, இருமல் மற்றும் உடல் வலி தான். கை வைத்தியத்தில் மிளகிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. ஆங்கில மருந்துகளைத் தேடி ஓடுவதற்கு முன், நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் மிளகை வைத்து எப்படி ஒரு சக்திவாய்ந்த கஷாயம் தயார் செய்வது என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:


சமையலறையில் எளிதாகக் கிடைக்கக்கூடிய மூன்று பொருட்கள் மட்டுமே இதற்குத் தேவை:


மிளகு: 2 தேக்கரண்டி

தண்ணீர்: 2 டம்ளர்

பனங்கற்கண்டு: இனிப்பிற்கு ஏற்ப (சிறிதளவு)


செய்முறை விளக்கம்:




இந்த கஷாயம் செய்வதில் மிக முக்கியமான விஷயம் மிளகைத் தயார் செய்யும் முறைதான்.


முதலில் ஒரு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகைப் போட்டு நன்றாகச் சூடாக்கவும். மிளகு லேசாகப் பொரிந்து, அதன் மணம் வரும் வரை நன்றாகக் 'கருக்க' வேண்டும்.


வறுத்த மிளகை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கக் கூடாது. ஒரு கரண்டியாலோ அல்லது இஞ்சிக் கல்லாலோ ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் அதன் முழுப் பலனையும் தரும்.


இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி, உடைத்த மிளகைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.


மிதமான தீயால் இரண்டு டம்ளர் தண்ணீர், ஒரு டம்ளராகச் சுண்டும் வரை பொறுமையாகக் கொதிக்க வைக்க வேண்டும்.


இனிப்பு சேர்த்தல்: இறுதியில் சுவைக்காகவும், தொண்டை கரகரப்பைப் போக்கவும் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இறக்கி வடிகட்டவும்.


எப்படிப் பருகுவது?


தயார் செய்த கஷாயத்தில் அரை டம்ளர் அளவு எடுத்து மிதமான சூட்டில் குடிக்கலாம்.


குறிப்பு: மிளகில் உள்ள பெப்பரின் (Piperine) எனும் சத்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை உடனடியாக அதிகரிக்க உதவுகிறது. இது உடல் வலியைக் குறைப்பதோடு, மூச்சுப்பாதையில் உள்ள சளியையும் கரைக்கும் வல்லமை கொண்டது.


சளித் தொல்லை ஆரம்பிக்கும் போதே இதைச் செய்து பருகினால், உடல் சோர்வு நீங்கி நல்ல முன்னேற்றம் தெரிவதை நீங்களே உணரலாம்!


(ச. சுமதி, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் , ஶ்ரீ KGS மேல்நிலைப் பள்ளி , ஆடுதுறை, தஞ்சை மாவட்டம்)