Lunch Menu: தூதுவளை ரசம் வைத்து... ஆஹா.. நினைக்கும்போதே பசிக்குதே.. இன்றைய ஸ்பெஷல்!
- ந.தீபலட்சுமி
தூதுவளை ரசம்.. கேட்கும்போதே பசிக்கும்.. அப்படி ஒரு சுவையான ரசம் இது.
ரசம் தயாரிப்பதற்கு முன் தூதுவளை பற்றி சிறிது அறிந்து கொள்வோமா....!
தூதுவளை (Solanum trilobatum) என்பது மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது இந்தியாவிலும் சில வெப்பமண்டல நாடுகளிலும் காணப்படுகிறது.
தூதுவளைக் கொடி மற்றும் இலை போன்ற அனைத்து பகுதிகளிலும் சிறுசிறு வளைந்த முட்களைக் கொண்டிருக்கும். வேலிகள் அல்லது மற்ற செடியினங்களைப் பற்றிக்கொண்டு படர்ந்து ஏறும் தன்மை கொண்டது.
இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. உருண்டை வடிவில் சிவந்த நிறப் பழங்களைக் கொண்டிருக்கும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் பூக்கும். வெள்ளை நிறத்தில் பூக்கும் அரிதான தூதுவளை வகையும் உண்டு.
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும். இது மூலிகைகளில் ஒன்றாகும். இதற்கு தூதுவளை, தூதுளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு.
இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இதனை அரைத்துப் பச்சடியாக உணவில் சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.
சரி, இப்பொழுது ரசம் வைக்கப் போலாம் வாங்க.. அதுக்கு முன்னாடி கிச்சனுக்குள் நுழையணும்...!
தேவையான பொருட்கள்:
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பற்கள்
பச்சை மிளகாய் -3
வெந்தயம் - சிறிதளவு
தக்காளி -2
புளி - எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை -தாளிக்க
கொத்தமல்லி - நறுக்கியது
உப்பு - தேவையான அளவு
தூதுவளை ( இது முட்கள் நிறைந்திருக்கும் எனவே கத்தரிக் கோலால் நறுக்குவது சாலச் சிறந்தது)
செய்முறை:
ஊறவைத்த புளியை கரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பழுத்த தக்காளி இரண்டையும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் முட்கள் நீக்கி நன்கு கழுவி வைத்துள்ள தூதுவளை இலைகளை சேர்த்து மிக்ஸியில் சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்க:
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு,வெந்தயம் , மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அதில் சிறிது கறிவேப்பிலையும் சேர்க்கவும்.
பின்பு நாம் அரைத்து வைத்துள்ள தூதுவளை கலவையினைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் அதனுடன் புளிக் கரைசலை சேர்த்து சிறிது கொதி வரும் வரை அடுப்பில் வைக்கவும்.
கொதித்து நுரை வந்ததும் அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி தழை களைச் சேர்த்து இறக்கவும்.
இப்பொழுது சூடான சுவையான ஆவி பறக்கும் தூதுவளை ரசம் ரெடி ...!
இதை சூடான சாதத்துடன் சாப்பிடலாம். தூதுவளை மருத்துவ குணம் நிறைந்தது எனவே சிறு கசப்புத் தன்மை உடையது. இது இருமல்,சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து..!
வாங்க சாப்பிடலாம்...!
(ந.தீபலட்சுமி, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் , அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)