என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
- ஸ்வர்ணலட்சுமி
இந்தியா ஒரு அற்புதமான நாடு என்பதில் சந்தேகமே இல்லை.. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம், பாரம்பரியம், உணவுப் பழக்க வழக்கம் என கலந்து கட்டி அசத்துவதுதான் நம்ம நாட்டோட ஸ்பெஷாலிட்டியே.. அந்த வகையில் இன்று ஆந்திராப் பக்கம் ஒரு விசிட் அடிப்போம்.
அங்கு ஒரு வகையான உணவு பாப்புலராக உள்ளது. அதுதான் தோசைக்காய பப்பு (dosakaya pappu). தோசைக்காய் என்பது, மஞ்சள் வெள்ளரிக்காய் அல்லது மெட்ராஸ் வெள்ளரிக்காய் என்று அழைக்கப்படும் குக்கும்பர் வகை காய். இது கோடை வெயிலுக்கு அருமையான உணவு.
இப்ப நல்லா வெயில் அடிக்குதுல்ல.. வாங்க இதைச் செஞ்சு சாப்பிட்டுப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு ஒரு கப்
சிறிய வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் கட் செய்தது அரை கப்
பூண்டு ஆறு பல்
சீரகம் ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள்1/4 ஸ்பூன்
கருவேப்பிலை மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு
உப்பு தேவைக்கு ஏற்ப
பச்சை மிளகாய் 2 வர மிளகாய் 2
தக்காளி ஒன்று பொடியாக கட் செய்யவும்
நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு
செய்முறை
ஒரு குக்கரில் துவரம் பருப்பை நன்றாக கழுவி போடவும் அதனுடன் மஞ்சள் தூள் சிறிதளவு, பூண்டு, தக்காளி, பெருங்காயம் ,சீரகம், பச்சை மிளகாய் ,வர மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூன்று அல்லது நான்கு விசில் விடவும்
பருப்பு மத்து போட்டு கடையவும். ஒரு கடாயில் தோசைக்காய் பொடி பொடியாக கட் செய்தது போட்டு வதக்கி கடைந்த பருப்புடன் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். பருப்பு கெட்டியாகும் வரை நன்றாக வேக வைக்கவும்
நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். மல்லித்தழை தூவவும். சூடான சாதத்துடன் நெய் சேர்த்து தோசைக்காய் பப்பு சாப்பிட மிகவும் அருமையாகவும், சுவையாகவும் ,கோடைக்கு ஏற்ற உணவாகவும் இருக்கும். இந்த தோசைக்காய் ஆந்திராவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
தோசைக்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்
தோசைக்காய் அல்லது காஷ்மீர் வெள்ளரி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான பலன்கள் உள்ளது. உடல் நலத்துக்கு சூப்பரான காயாகும்.
1. வைட்டமின்கள், கனிமங்கள் ,நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது.
2. சர்க்கரை நோயாளிகள் உடல் எடையை குறைக்க விரும்புவோர் இந்த உணவை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. கலோரிகள் குறைவு நார்ச்சத்து அதிகம்.
3. வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது
4. செரிமானத்திற்கு உதவுகிறது. அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை போக்குகிறது.