செல்லமாக வளர்ப்பது தவறில்லை.. செல்லாத செல்வங்களாய் வளர்க்கலாமோ!?

Su.tha Arivalagan
Dec 04, 2025,12:00 PM IST

- J.லீலாவதி


தான் பெற்ற செல்வங்களை 

செல்லமாக வளர்ப்பது தவறில்லை

செல்லாத செல்வங்களாய் வளர்த்து என்ன பயன்?

நடக்கப் பழக்கியது நாம்

உண்ணப் பழக்கியது நாம்

நடக்க சொல்லித் தந்தீர்களே 

நடப்பதை சொல்லித் தந்தீர்களா?

பேச கற்று தந்தீர்களே 

எப்படி பேச வேண்டும் என்று கற்றுத் தந்தீர்களா?

உண்ணப் பழக்கி தந்தீர்களே 

எதை உண்ணக்கூடாது என்று பழக்கி தந்தீர்களா?

ஆடை அணிவித்து அழகு பார்த்தீர்களே 

எந்த ஆடையினால் ஆபத்து என்று பார்த்தீர்களா?

கற்றுக் கொடுக்கும் ஆசானாய் நாம்

கற்றுக்கொள்ளும் மாணவர்களாய் நம் பிள்ளைகள்

நாம் விரும்பிய படி வளர்த்து




அவர்கள் அதையே கற்று வளர்வதை கவனித்தீர்களா?

கேட்டதை உடனே வாங்கித் தருவது

குழந்தைகளுக்கு தெரிந்தே சொத்து சேர்த்து வைப்பது

சொந்த காலில் நிற்க விடாமல் தடுப்பது

இதுதான் நாகரீகமா?

தனக்கென்று தன்னம்பிக்கை தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்லி வளர்த்தீர்களா?

நாம் படும் இன்பங்களை மட்டும் பகிர்ந்து

துன்பங்களை மறைத்து வளர்த்து என்ன பயன்?

அன்றாடம் நாம் படும் இன்ப துன்பங்களையும் 

அதிலிருந்து விடுபடவும் கற்றுத்தர ஏன் மறந்தீர்கள்?

கீழே விழும் குழந்தையை தாங்கிப் பிடிப்பது தவறில்லை

விழுவதற்குள் ஏன் தாங்கி பிடிக்கிறீர்கள்?

விழுந்தால்தானே 

எழுந்து நிற்க முடியும்

உழைக்கக் கற்றுக் கொடுங்கள்

உழைப்பதற்கான காரணங்களையும் கற்றுக் கொடுங்கள்.

அள்ளி அரவணைத்து அன்றாடம் தேற்றி வளருங்கள்

அவர்களிடம் நேரத்தை செலவிடுங்கள்

நம் குழந்தையின் எதிர்காலம் நம் கைகளில் அல்ல

நம் வளர்ப்பில் உள்ளது

நாம் இல்லாத காலத்தில் 

நாம் கற்றுக் கொடுத்ததை வைத்துதானே அவர்களின் எதிர்காலம்

நினைவிருக்கட்டும்!


(J.லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)