மனிதன் மாறி விட்டான்!
- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி
கண்களைத் திறந்த போது ஆனந்தனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாம் புதிதாக தெரிந்தன. என்ன இது ? நான் எங்கே இருக்கிறேன்? தேவலோகத்தில் இருக்கிற மாதிரி தெரிகிறதே. வீடு கண்ணாடி போல் பளபளத்தன . வெளியே பறக்கும் கார்கள் சத்தமில்லாமல் உலா வந்தன. பார்த்த மனிதர்களின் கைகள் ஒளிர்ந்தன. ஆனந்தனின் குழப்பத்தை கண்ட ஒரு பெண் அவன் அருகில் வந்தாள். அவளது கண்கள் நீல நிறமாய் மின்னின.
“உங்கள் முகத்தில் குழப்பம் தெரிகிறது. மன்னிக்க வேண்டும். நீங்கள் ஒரு “ஆய்வு பெட்டியில்” இருந்து வெளியே வந்திருக்கிறீர்கள். உங்கள் பழைய நினைவுகள் இன்னும் பழைய காலத்தில்தான் இருக்கின்றன போல”என்றாள்.
ஆனந்தன் அவளை வினோதமாகப் பார்த்தான். “நான் ஆய்வு பெட்டிக்குள் இருந்தேனா? நான் படுத்து தூங்கினேன். அவ்வளவுதான் தெரியும் .”
“ஆம் நீங்கள் உறங்கச் சென்றது 2025. இப்போது 2075. உலகமே மாறிவிட்டது. மனிதர்கள் மாறிவிட்டார்கள் என்ற அந்த பெண், தன்னை “புது உலகத் தேவதை” என அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
நான் 50 ஆண்டுகள் தூங்கிவிட்டேனா.? எனது குடும்பம் , எனது நண்பர்கள் , எனது கைபேசி எங்கே…? எல்லாமே ஒரு கனவு போல தோன்றியது. .
“வாருங்கள் உங்கள் உலகத்தை பாருங்கள் என்றாள் அந்த “புது உலக தேவதை.”
ஆனந்தனை புதிய உலகத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே மனிதர்கள் பேசிக் கொள்வதில்லை. தங்கள் மனதில் இருந்து நேரடியாக தகவல்களை பரிமாறிக் கொண்டனர். உணர்வுகள் இயந்திரத்தனமாய் இருந்தன. ஒரு மாத்திரை உண்டால் அறுசுவை உணவின் சுவையை உணர முடிந்தது.
எங்கள் வாழ்வில் கஷ்டங்கள் இல்லை. நோய்கள் இல்லை. வறுமை இல்லை. நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம் என்றாள் புது உலக தேவதை.
“ஆனால் உணர்வுகளுக்கு என்ன ஆனது ? கோபம், தூக்கம், அன்பு இவை எல்லாம் எங்கே “என ஆனந்தன் கேட்டான் .
அவை எல்லாம் தேவையில்லாத உணர்ச்சிகள். அவை தான் போர்களையும் துக்கங்களையும் உண்டாக்கின. நாங்கள் அவை அனைத்தையும் எங்கள் உடலில் இருந்து நீக்கிவிட்டோம். நாங்கள் ஒரு பரிபூரண நிம்மதியான சமூகம் என்றாள்.
ஆனந்தனுக்கு தலைசுற்றியது. அவனது காதலியை நினைத்துப் பார்த்தான் . அவளை பார்க்க மனம் ஏங்கியது . அந்த பழைய உலகில் துன்பங்கள் இருந்தன .ஆனால் அன்பும் பாசமும் அதையும் விட பல மடங்கு இருந்தன.
எனக்கு இந்த உலகம் பிடிக்கவில்லை .. இங்கே நான் ஒரு இயந்திரம் போல் உணர்கிறேன் என்றான் ஆனந்தன்.
ஆனந்தனின் இந்த உணர்ச்சியை புரிந்து கொள்ள முடியாத” புது உலக தேவதை” ஒரு சிரிப்பை வெளியிட்டாள். அது ஒரு உண்மையான சிரிப்பாக தெரியவில்லை. கணினியில் உருவாக்கப்பட்ட ஒரு சிரிப்பாக தோன்றியது.
திடீரென்று ஆனந்தன் ஒரு முடிவெடுத்தான். அவனது விரலில் இருந்த ஒரு இரத்த குழாயை, உடைந்த கண்ணாடியின் விழும்பில் தேய்த்தான். ரத்தம் வழிய ஆரம்பித்தது . அலறினான். அவள் ஒரு மனிதன் வழியில் துடிப்பதை முதல் முறையாகப் பார்த்தாள். அவளது நீல கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.
ஆனந்தனின் அந்த செயல் அந்த உணர்ச்சியற்ற சமூகத்தில் ஒரு பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. முதல் முறையாக அவர்கள் ஒரு மனிதனின் உண்மையான உணர்ச்சிகளையும் வலியையும் கண்டனர். அது அவர்களது மனதின் ஆழத்தில் உறங்கிக் கிடந்த ஒரு விந்தையான உணர்வைத் தட்டி எழுப்பியது.
அப்போது அந்த புது உலக தேவதையின் கண்களில் ஒரு சிறிய கண்ணீர் துளி உருண்டது .அது எந்திர கண்ணீர் அல்ல .உண்மையானது .ஆனந்தனின் வலி அவளது மனதின் ஆழத்தில் உறங்கிக் கிடந்த மனித உணர்வுகளை எழுப்பி இருந்தது.
அவள் கண்களில் இருந்த அந்த ஒரு துளி கண்ணீர் அவள் மாறிவிட்டாள் என்பதை காட்டியது. அந்த ஒரு நொடியில் ஆனந்தனுக்கு தெரிந்தது. தொழில்நுட்பத்தால் மனிதன் மாறலாம் .ஆனால் மனிதனின் உணர்ச்சிகள் ஒருபோதும் மாறாது .அந்த கண்ணீர் துளி அந்த புதிய உலகில் ஒரு புதிய விடியலுக்கு வழி வகுத்தது.
(சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)